மெதடிஸ்த மத்திய கல்லூரி தேசிய பாடசாலையாக தரமுயர்கின்றது

(க. விஜயரெத்தினம்)
மட்டக்களப்பு நகரில் புகழ்பூத்த கல்லூரியும்,204 ஆண்டுகள் பழமை வாய்ந்ததும்,இலங்கையின் முதலாவது ஆங்கிலப் பாடசாலையுமான மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி இன்றுவரையும் மாகாணப் பாடசாலையாகவே காணப்படுகின்றது.
இருப்பினும் முன்னாள் பழைய மாணவர்சங்கத் தலைவர் எஸ்.சசிகரன் பெரும்முயற்சிகளை செய்து இலங்கைத் திருநாட்டின் மேன்மைதங்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களை இக்கல்லூரிக்கு வரவழைத்திருந்தார்.இவ்வாறு இருந்தாலும் மெதடிஸ்த மத்திய கல்லூரியை தேசிய பாடசாலையாக தரமுயர்த்துவதில் பெரும் சிரமமாகவே காணப்பட்டது.
முன்னாள் பழைய மாணவர் சங்கத்தலைவரும்,முன்பள்ளி பாடசாலை பணியகத்தின் செயலாற்றுப் பணிப்பாளருமான எஸ்.சசிகரனின் தூரநோக்குச் சிந்தனையின் தொடர்ச்சியான விடாமுயற்ச்சியின் பயனால் இவ்வரலாற்றுப் பெருமைமிக்க பாடசாலையை தேசியபாடசாலையாக மாற்றியமைக்க முன்னாள் கிழக்கு ஆளுநர் ரோஹித போகல்லாகம அவர்களை உத்வேகத்துடன் கதைத்து அவர் மூலமாகவும் செயற்படுத்தியும்,மாகாணத்திலிருந்து இப்பாடசாலையை விடுவித்தும்,தேசிய பாடசாலையாக தரமுயர்த்துவதற்கான  உத்தியோகபூர்வமான அனுமதியை கடந்த 2018.12.29 கிழக்கு மாகாண ஆளுநர் வழங்கியிருந்தார்.
தேசிய பாடசாலையாக தரமுயர்த்துவதற்கான உத்தியோகபூர்வமான அனுமதி கடிதத்தை முன்னாள் பழைய மாணவர்சங்கத் தலைவர் எஸ்.சசிகரன் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் முதல்வர் இராசதுரை பாஸ்கரிடம் இன்று வியாழக்கிழமை(10.1.2019)காலை 8.45 மணியளவில் வழங்கி வைத்தார்கள்.
இந்நிகழ்வில் பழைய மாணவர்சங்கத் தலைவர் வீ.தர்சன்,செயலாளரும் வைத்திய கலாநிதியுமான நவரெட்ணம் மௌலீசன்,பாடசாலை அபிவிருத்தி சங்கத்தின் செயலாளர் எந்திரி வை.கோபிநாத்,பிரதியதிபர்களான எஸ்.சதீஸ்வரன்,இ.இலங்கேஸ்வரன் மற்றும் பழையமாணவர் சமூகத்தினர் கலந்துகொண்டார்கள்.
முன்னாள் பழைய மாணவர்சங்கத் தலைவர் சசிகரன் இக்கல்லூரியின் பலதுறை சார்ந்த வளர்ச்சிகளிலும் தன்னை அர்ப்பணித்து வெற்றிகண்டவர் ஆவார்.இக்கல்லூரியினை ஊடறுத்துச் செல்லும் ஆமென் கோணர் வீதியை மூடி அதனை பாடசாலையின் உடமையாக்கியதில் பெரும்பங்காற்றியமை குறிப்பிடத்தக்கதாகும்.