புலம்பெயர் தமிழ் உறவுகளின் சமூக சிந்தனை,அவர்களின் சேவை பாராட்டுக்குரியதாகும்


(க. விஜயரெத்தினம்)

புலம்பெயர் தமிழ் உறவுகளின் சமூக சிந்தனை,அவர்களின் சேவை பாராட்டுக்குரியதாகும்.புலம்பெயர் தமிழர்களின் எண்ணக்கருவானது நிலைத்து நிற்கக்கூடிய அபிவிருத்தியில் கவனம் செலுத்தினால் மட்டக்களப்பு வறுமை நீங்கப்பெற்றிருக்கும் என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார்.
மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலக பிரிவின் புலயவெளி கிராமத்தின் அபிவிருத்தி செயற்த்திட்டத்தினை பிரித்தானியாவில் வாழ்கின்ற இலங்கை தழிழ் மக்களின் உதவித்திட்டமாக பல சமூக சமய பணிகளை ஆரம்பித்து செயலாற்றி வருகின்றனர். அதன் அடிப்படையில் "போரிற்கு பின்னரான மக்களின் நிலைப்பாடு எவ்வாறு...?" எனும் தொனிப்பொருளிலான கலந்துரையாடல் இன்று சனிக்கிழமை(19) காலை புலயவெளியில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு  அதிதியாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன்,மட்டக்களப்பு  மாநகரசபை  முதல்வர் தி.சரவணபவன் மற்றும்  அரசாங்க திணைகள உத்தியோகத்தர்கள்,பொதுமக்கள்,சிவில் பாதுகாப்பு உறுப்பினர்கள் கலந்து கொன்டனர்.
அரசாங்க அதிபர் மேலும் பேசுகையில் :-மனிதநேயம் மிக்க,மனிதபிமான மனிதர்களைக் கொண்ட புலம்பெயர் அமைப்புக்களின் சமூக சிந்தனை சிறப்பானதானதாகும்.நாட்டில் ஏற்பட்டுள்ள யுத்தம்,அனர்த்தம் என்பனவற்றினால் வடகிழக்கின் கல்வி,பொருளாதாரம், வீழ்ச்சி கண்டுள்ளது.அரசாங்கத்தின் திட்டங்களை எம்மக்கள் அனுசரித்து திட்டங்களை சரியாக பயன்படுத்தி வளங்களை பயன்படுத்தினால்  வடகிழக்கின் கல்வி,பொருளாதாரம்,விவசாயம்,உள்ளிட்ட அனைத்தும் முன்னேற்றம் காணும் என்பதில் ஐயப்படத்தேவையில்லை.
புலம்பெயர் தமிழர்களின் பார்வையானது இலங்கைத்தமிழர்களின் கல்வி,வறுமை,சுகாதாரம் நீக்குவதற்கு எடுக்கப்படும் கரிசனை சரியானது.இருந்தும் இவற்றைவிட எம்மக்களுக்கு தொழில்துறை,தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தி கொடுத்தால்தான் நிலையான அபிவிருத்தியை பெறமுடியும்.
நிதிகளையும்,சலுகைகளையும் பொதுமக்கள் மட்டும் பெற்றால் போதாது மக்களின் மனநிலையில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும்.மட்டக்களப்பு மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய கிராமங்களின் மக்களின் பொருளாதாரம், கல்வி என்பன உயர்த்தப்பட வேண்டும்.பெற்றோர்கள், பொதுமக்கள் சிந்தித்துச் செயற்பட்டால் மாவட்டத்தின் பொருளாதாரம், கல்வியும் வளர்ச்சியடையும்.சொந்தக்காலிலும்,ஒன்றிணைந்தும் உழைத்தால் சமூகத்தின் வறுமை ஒழிக்கப்படும்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளவர்கள் ஆலயங்களுக்கும்,விரதங்களுக்கும்,ஆடம்பரச் செலவுகளுக்கும் செலவழிக்கும் பணம் அதிகமானது.ஒரு தனிநபர் 5நுண்கடன் கம்பனிகளிடம் கடனைப்பெற்றால் மட்டக்களப்பின் வறுமை எவ்வாறு ஒழிக்கப்படும் எனத் தெரிவித்தார்.