அயல் வீட்டுப் பெண் குளிப்பதை இரகசியமாக காணொளி எடுத்த இளைஞன் கைது


கொழும்பு 07 பகுதியில் அயல் வீட்டுப் பெண் குளிப்பதை இரகசியமாக காணொளி எடுத்து, அதனை அவரது நண்பிக்கு அனுப்பிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட இளைஞனை மே மாதம் 04 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு தலைமை நீதவான் அஸங்க எஸ். போதரகம வியாழக்கிழமை (23) உத்தரவிட்டுள்ளார்.

மருதமுனைப் பகுதியைச் சேர்ந்த குறித்த சந்தேகநபர், கொழும்பு 07 இல் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். அவருக்கு அருகிலுள்ள வீட்டில் வாடகைக்கு வசித்து வரும் இளம் பெண் ஒருவர் குளிப்பதைத் தனது கையடக்கத் தொலைபேசி மூலம் இரகசியமாக காணொளி எடுத்துள்ளார்.

அந்த காணொளியை பாதிக்கப்பட்ட பெண்ணின் நண்பி ஒருவருக்கும் சந்தேகநபர் அனுப்பியுள்ளார்.

நண்பி அளித்த தகவலின் பேரில் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், உடனடியாகச் சந்தேக நபரின் வீட்டிற்குச் சென்று அவரைச் சத்தமிட்டுள்ளார். ஆத்திரமடைந்த அவர், சந்தேகநபரின் கையடக்கத் தொலைபேசியைப் பறித்து அங்கேயே அடித்து உடைத்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண் இது குறித்து கறுவாத்தோட்டம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார். இதனை அடுத்து பொலிஸார் சந்தேகநபரைக் கைது செய்து நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

நீதிமன்றத்தில் பொலிஸார் சமர்ப்பித்த தகவல்களைப் பரிசீலித்த நீதவான், சந்தேகநபரை மே 4-ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.