மட்டக்களப்பு - ஏறாவூர் நீதிமன்றில் பொலிஸாரின் துப்பாக்கியை பறித்துக்கொண்டு தப்பியோடிய நபர் கைது


மட்டக்களப்பு - ஏறாவூர் நீதவான் நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் கைத்துப்பாக்கியை பறித்துக் கொண்டு தப்பியோடிய நபர், பொலிஸாரால் துரத்தி பிடிக்கப்பட்டு கைது செய்யப்பட்ட சம்பவம் திங்கட்கிழமை (20) முற்பகல் இடம்பெற்றுள்ளது.

ஏறாவூர் நீதவான் நீதிமன்றத்தில் வழமை போன்று பாதுகாப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில், அங்கு வந்த ஓட்டமாவடி பகுதியை சேர்ந்த 32 வயதுடைய நபர் ஒருவர், பாதுகாப்புப் பணியில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தரின் கைத்துப்பாக்கியை (Pistol/Handgun) திடீரென பறித்துக்கொண்டு தப்பியோடியுள்ளார்.

நீதிமன்ற வளாகத்திலேயே இடம்பெற்ற இந்த துணிகரச் சம்பவத்தால் அங்கு பெரும் பதற்றமும் பரபரப்பும் நிலவியுள்ளது. உடனடியாக செயற்பட்ட நீதிமன்ற பாதுகாப்பு பிரிவினர் மற்றும் அங்கிருந்த பொலிஸார், தப்பியோடிய சந்தேக நபரை நீண்ட தூரம் துரத்தி சென்று வெற்றிகரமாக மடக்கிப் பிடித்துள்ளனர்.

பறிக்கப்பட்ட துப்பாக்கி சந்தேக நபரிடமிருந்து பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதோடு, அவர் தற்போது ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்.