ஏறாவூர் நீதவான் நீதிமன்றத்தில் வழமை போன்று பாதுகாப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில், அங்கு வந்த ஓட்டமாவடி பகுதியை சேர்ந்த 32 வயதுடைய நபர் ஒருவர், பாதுகாப்புப் பணியில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தரின் கைத்துப்பாக்கியை (Pistol/Handgun) திடீரென பறித்துக்கொண்டு தப்பியோடியுள்ளார்.
நீதிமன்ற வளாகத்திலேயே இடம்பெற்ற இந்த துணிகரச் சம்பவத்தால் அங்கு பெரும் பதற்றமும் பரபரப்பும் நிலவியுள்ளது. உடனடியாக செயற்பட்ட நீதிமன்ற பாதுகாப்பு பிரிவினர் மற்றும் அங்கிருந்த பொலிஸார், தப்பியோடிய சந்தேக நபரை நீண்ட தூரம் துரத்தி சென்று வெற்றிகரமாக மடக்கிப் பிடித்துள்ளனர்.
பறிக்கப்பட்ட துப்பாக்கி சந்தேக நபரிடமிருந்து பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதோடு, அவர் தற்போது ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்.













