பாறுக் ஷிஹான்
யாழ்.போதனா வைத்திய சாலையில் கடமையாற்றும் தாதிய உத்தியோகத்தர்களுக்கு எதிராக அவதூறு பரப்பும் செய்திகள் ஊடகங்களில் வெளியிடப்பட்ட குற்றச்சாட்டை முன்வைத்து திடீர் அடையாள பணிப்புறக்கணிப்புப் போராட்டம் ஒன்றினை வைத்தியசாலையின் அரச தாதி உத்தியோகத்தர் சங்கம் ஏற்பாட்டில் இன்று(5) காலை முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை விபத்து அவசர சிகிச்சைப் பிரிவு தாதிய உத்தியோகத்தர்கள் இருவர் தகாத உறவில் ஈடுபட்டனர் என்றும் அது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றது என்றும் ஊடகங்களால் நேற்று செய்தி வெளியிடப்பட்டது. விசாரணைகள் இடம்பெறுவதை வைத்தியசாலைப் பணிப்பாளர் உறுதி செய்தார் என்றும் குறிப்பிடப்பட்டிருந்த்து.
இந்தச் சம்பவம் தொடர்பில் சில ஊடகங்கள் அனைத்து தாதிய உத்தியோகத்தியோகத்தர்களையும் பாதிக்கும் வகையில் செய்தி வெளியிடப்பட்டது எனவும் வைத்தியசாலைப் பணிப்பாளரால் மறுப்பு அறிக்கை வெளியிடப்படவேண்டும் என்று வலியுறுத்தியும் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை அரச தாதி உத்தியோகத்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் தாதிய உத்தியோகத்தர்களுக்கு எதிராக வெளியிடப்பட்ட செய்தி தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று இன்று முற்பகல் 11 மணிக்கு வைத்தியசாலைப் பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தலைமையில் இடம்பெற்றது.
அத்துடன் தாதியர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளமையினால் வைத்திய சேவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதால் நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர் நோக்கியுள்ளனர்.
இப்போராட்டத்தை அடுத்து யாழ்.போதனா வைத்தியசாலை புனிதமான இடம். இங்கு பணியாற்றுபவர்கள் புனிதமான சேவையில் ஈடுபட்டுள்ளனர். வைத்தியசாலை தொடர்பில் வெளியான செய்தியில் உண்மையில்லை. அவ்வாறான சம்பவம் நடைபெறவே இல்லை எனவும் ஊடகங்களில் வெளியான செய்தி முற்றிலும் தவறானது .அவ்வாறு எதுவுமே யாழ்.போதனா வைத்தியசாலையில் இடம்பெறவில்லை என யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி மறுப்பு தெரிவித்துள்ளார்.
இன்று(5) வைத்தியசாலையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தனது கருத்தில்
யாழ்.போதனா வைத்தியசாலையில் 500 க்கும் மேற்பட்ட தாதியர்கள் கடமையாற்றும் புனிதமான இடம். எனவே இங்கு கடமையாற்றுபவர்கள் புனிதமாக கடமையாற்றுகின்றார்கள். நோயாளர்களை கவனத்துடன் பரிவுடனும் கடமையாற்றுகின்றனர்.யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தொடர்பில் வெளியான செய்தி தவறானது. அவ்வாறான சம்பவங்கள் எதுவும் நடைபெறவும் இல்லை . விசாரணைகளும் நடைபெறவில்லை.அந்த தவறான செய்தியால் வைத்தியசாலை சேவைக்கு இடையூறாக உள்ளது. செய்திகள் வெளிவந்தமை தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளோம்.
இந்த செய்தியால் இங்கு கடமையாற்றும் ஊழியர்களுக்கு மன சோர்வு ஏற்பட்டு சேவையில் தடங்கல் ஏற்பட்டுள்ளது.
தாதியர்கள் தவறிழைத்தால் அது தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டால் முதலில் உள்ளக விசாரணைகள் நடைபெற்று இருக்கும். ஆனால் அவை எதுவும் நடைபெறாத நிலையில் அவ்வாறு செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இந்த செய்தி வெளியாகியமை தொடர்பில் விசாரணைகள் உரிய முறையில் மேற்கொள்ளப்பட்டு அந்த செய்தி வெளியிடப்பட்டமை தொடர்பிலும் , அதன் பின்னணி தொடர்பிலும் விசாரணை செய்யப்பட வேண்டும்.
அன்மையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நோயாளி ஒருவருக்கு சிகிச்சையளித்தமையில் குறைபாடு என நோயாளியின் உறவினரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது. அது தொடர்பில் விசாரணைகள் நடைபெறுகின்றன. அந்த செய்தியினையே இணையத்தளங்கள் , ஊடகங்கள் திரிவுபடுத்தி செய்தியினை வெளியிட்டுள்ளன.
இவ்வாறான செய்தியால் கடுமையான மனவுளைச்சலுக்கு உட்பட்டுள்ளனர். பெரும்பாலனவர்கள் பெண் தாதியர்கள் இங்கே பணியாற்றுகின்றனர். இந்த செய்தியால் அவர்களே பெரும்பாலும், பாதிக்கப்பட்டுள்ளனர்.