எதிர்வரும் (புதன் கிழமை) 13.03.2019 அதிபர், ஆசிரியர்கள் கவனயீர்ப்புப் போராட்டம்.




இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம், இலங்கை ஆசிரியர் சங்கம் கூட்டாக அழைப்பு.

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட அனைத்து மாகாணங்களிலும் எதிர்வரும் 13.03.2019 (புதன் கிழமை) அதிபர், ஆசிரியர்கள் ஒன்றிணைந்து கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளனர். இதற்கான அழைப்பினை இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் திரு.சரா.புவனேஸ்வரனும், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் திரு.ஜோசப் ஸ்ராலினும் கூட்டிணைந்து விடுத்துள்ளனர்.

வெளியிடப்பட்டுள்ள அழைப்பில்…….

தொடர்ச்சியாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கர்த்தால்களும், கடையடைப்புக்களும் காலத்தின் தேவை கருதி நடைபெறுகின்றன. அவற்றுக்குத் தீர்வு கிடைக்க வேண்டும் என எமது ஆதங்கங்களையும், அநீதிகளையும் உலகுக்கு எடுத்துக்காட்டுகின்றோம். அதன் ஒரு செயற்பாடாக கடந்த25.02.2019 அன்று நடைபெற்ற வடமாகாணம் தழுவிய காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கான போராட்டத்தில் நாம் முழுமையாக பங்குகொண்டோம். அவ்வாறே அடக்குமுறைகளுக்கும், அநீதிகளுக்கும் எதிரான போராட்டங்களுக்கு நாம் பூரண ஆதரவையும் வழங்கி வருகின்றோம்.

அதேபோன்று குறைந்த வேதனங்களோடு பணியாற்றுகின்ற அதிபர்கள், ஆசிரியர்கள் தமது வேதனங்கள் அதிகரிக்கப்படவேண்டும் எனவும், அவசியமற்ற சுமைகள் நீக்கப்படவேண்டும் எனவும், மத்திய அரசு கல்விக்காக ஒதுக்கும் நிதி போதுமானதாக இல்லை எனவும் பல போராட்டங்களை முன்னெடுத்தும் எந்தப் பயனும் இல்லை.

மாறாக எதிர்வரும் 13.03.2019அன்று (புதன் கிழமை)

ஆசிரியர்கள், அதிபர்களின் சம்பளத்தை உயர்த்துதல்.
ஆசிரியர்கள்மீது செலுத்தப்படும் தேவையற்ற நெருக்கீடுகளை அகற்றுதல்.
மொத்த தேசிய உற்பத்தியில் கல்விக்காக 6% ஒதுக்குதல்.

ஆகிய மூன்று முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து அதிபர்கள், ஆசிரியர்கள் முன்னெடுக்கும் போராட்டங்களை மாணவர்களும், பெற்றோரும் புரிந்து கொள்ளும் விதத்தில் அதிபர்கள், ஆசிரியர்கள் அனைவரும் பாடசாலைக்குச் சென்று காலை:08.00 மணிமுதல் காலை:08.30 மணிவரை கைகளில் கறுப்புப் பட்டி அணிந்து பாடசாலை நுழைவாயில் அமைதியாக ஒன்றுகூடி தமது கவனயீர்ப்பை வெளிப்படுத்தி, அன்றைய நாள் முழுவதும் கறுப்புப் பட்டியுடன் கடமையில் ஈடுபடுவது என முடிவுசெய்யப்பட்டுள்ளது.

இக்கவனயீர்ப்புப் போராட்டத்திற்கு அனைத்துத் தொழிற்சங்கங்களையும் ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம். என்று உள்ளது.தொழிற்  சங்கத் தோழமையுடன்,இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம். இலங்கை ஆசிரியர் சங்கம்.