நெற்செய்கைக் காணிகளில் காணப்படும் வைக்கோலை எரிக்க வேண்டாம்



அம்பாறை மாவட்டத்தில், பெரும்போக நெற்செய்கை அறுவடையின் பின்னர் நெற்செய்கைக் காணிகளில் காணப்படும் வைக்கோலை எரிக்க வேண்டாமென, கமநல சேவைகள் திணைக்களத்தால் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

வயல்வெளிகளில் அறுவடையின் பின்னர் மீதமாய் கிடைக்கக் கூடிய வைக்கோலை எரிப்பதால் ஏற்படக் கூடிய விளைவுகள், வைக்கோலை நிலத்தில் இடுவதால் ஏற்படக் கூடிய நன்மைகள் தொடர்பாக, விவசாய திணைக்களத்தின் அதிகாரிகள், பிரதேச செயலகங்கள் ரீதியாக பொது அறிவித்தல், துண்டுப்பிரசுரங்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றது.

இவற்றையும் மீறி, மாவட்டத்தின் பெரும்பாலான பிரதேசங்களில் வைக்கோலை எரிப்பதை அவதானிக்க முடிவதாகவும் இவ்வாறு வைக்கோலை எரிப்பவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் கமநல சேவைகள் திணைக்களம் தற்போது அறிவித்துள்ளது.

வைக்கோலை மண்ணுடன் சேர்ப்பதன் மூலம், மண்ணின் இரசாயன இயல்புகள், மண்ணின் பௌதீக இயல்புகள், உயிரியல் தன்மைகள் என்பன விருத்தியடைகின்றன. இவ்வாறான பல்வேறு நன்மைகளை பெற வைக்கோலை எரிக்காமல் மண்ணுடன் கலந்து சேதனைப் பசளைகளாகப் பயன்படுத்தினால் கூடுதலான விளைச்சளைப் பெற முடியுமென, அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.