குடிநீர் பிரச்சினைக்கான நிரந்தர தீர்வு




பாறுக் ஷிஹான்

அம்பாறை மாவட்டம் கல்முனை கிறீன் பீல்ட் குடியிருப்பாளர்களின் தடைப்பட்ட குடிநீர் பிரச்சினைக்கான நிரந்தர தீர்வை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதியுதீன் பெற்றுக்கொடுத்துள்ளார்.

கிறீன் பீல்ட் தற்காலிக முகாமைத்துவ குழுவினரின் வேண்டுகோளுக்கு அமைவாக அமைச்சர் ரிஷாட் பதியுதீனால் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபைக்கு ரூபா 714,358.13 சதத்தினை செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த காசோலையை உத்தியோகபூர்வமாக கையளிக்கின்ற நிகழ்வு செவ்வாய்க்கிழமை(19) மாலை கிறீன் பீல்ட் குடியிருப்பு முகாமைத்துவ காரியாலயத்தில் நடைபெற்றது.

குறித்த காசோலையை பெற்றுக்கொள்வதற்கு பெரும் முயற்சிகளை மேற்கொண்ட முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அப்துல் ரஸ்ஸாக் கல்முனை மாநகரசபை உறுப்பினர் எம்.ஏ மனாப் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் அம்பாறை மாவட்ட கொள்கை பரப்புச் செயலாளர் ஜுனைதீன் மான்குட்டி ஆகியோர் இதன் போது கலந்து கொண்டனர்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் நீர் வழங்கல் மற்றும் உயர் கல்வி அமைச்சருமான றவூப் ஹக்கீம் குறித்த மக்களில் எவ்வித கரிசனையும் செலுத்தவில்லை எனவும் அவரது அமைச்சின் கீழ் உள்ள நீர் வழங்கல் ஊடாக பாதிக்கப்பட்ட மக்களின் நலனில் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்ற விமர்சனத்தை இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அனைவரும் குற்றம் சாட்டினர்.

அத்துடன் கல்முனை கிறீன் பீல்ட் குடியிருப்பாளர்களின் குடிநீர் பிரச்சினைக்கான நிரந்தர தீர்வை பெற்றுக் கொடுப்பதற்கான கிறீன் பீல்ட் தற்காலிக முகாமைத்துவ குழுவினரின் முயற்சியின் பலனாக மேற்கொண்டு விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைய உரிய வேளையில் உதவிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான றிசாட் பதீயுதீனுக்கு கல்முனை கிறீன் பீல்ட் தற்காலிக முகாமைத்துவ குழு செயலாளர் அஹமட் புர்க்கான் நன்றிகளை அங்கு தெரிவித்தார்.