தமிழின நீதியை வென்றெடுக்க அணிதிரள கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் அழைப்பு


செங்கலடி நிருபர் 

வடக்கு கிழக்கு வலிந்து காணமலாக்கப்பட்டவர்களின் குடும்ப அங்கத்தவர்கள் ஒன்றிணைந்து கவனயீர்ப்பு பேரணியையும் கதவடைப்பு போராட்டத்தையும் நடத்த உள்ளனர். இதற்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர் சமூகம் முழு ஆதரவினை வழங்கி நிற்கின்றது எனவும்  
"தமிழின நீதியை வென்றெடுக்க அணிதிரளுமாறு அழைப்பு"என அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளனர். 

அரசியல் பிடியில் காலம் காலமாய் சிக்கித்தவிக்கும் எம் தமிழினத்திற்கு நீதி என்பது எட்டாக் கனியாகத்தான் இருக்கிறது. ஈழநாட்டில் பிறந்த எமக்கு இலங்கையின் இறுதி இனவாத போரின் போதும், அதன் பின்னரும் எந்தவகையிலும் நீதி கிடைக்கவில்லை. இலங்கை அரசு எம் இனத்தை பயங்கரவாதம் எனப் பெயர் சூட்டி எம் இனத்தின் உயிர்களை காவு கொண்டது. எம் தமிழின மக்களில் சிலர் என்ன ஆனார்கள் என்பதும் இதுவரை அறியப்படவில்லை. தமிழினம் அரசியல் வலையில் சிக்கி சின்னாபின்னமாகிறது. தற்போதும் குடியேற்றம் என்கின்ற பேரில் தமிழர்களின் காணிகள் சூறையாடப்படுகின்றன. எதிலுமே தமிழினத்திற்கு இன்றுவரை நீதி கிடைக்கவில்லை. 

ஆதாரங்கள், சாட்சியங்கள் என பலதரப்பட்ட விடயங்களினை தமிழினம் அரசாங்கத்துக்கு எதிராய் முன்வைத்தாலும் அவை காணாமல் ஆக்கப்படுகின்றன. எம்முடைய நீதியை பெற, ஜெனீவா மனித உரிமைகள் பேரவை உதவி நல்கும் என்ற எம்முடைய எதிர்பார்ப்பும் ஏமாற்றமாகவே இதுவரை இருந்து வந்துள்ளது. போர் இடம்பெற்று ஒன்பது ஆண்டுகள் நிறைவெய்திருந்தாலும் அரசாங்கம் இதுவரை எந்த பதிலையும் எமக்குத் தரவில்லை. இலங்கை அரசாங்கம் பிற நாடுகளையும் எம்மைப்போல் ஏமாற்றி இனவெறி நாடகத்தை அரங்கேற்றுகிறது. எனவே தான் நாங்கள் உள்ளக விசாரணையில் நம்பிக்கையிழந்து சர்வதேசத்தின் தலையீட்டை கோரியும், இலங்கையை பொதுச்சபையில் நிறுத்துமாறு ஐக்கிய நாடுகள் சபையிடம் கேட்டுக் கொள்வதுடன், இலங்கை அரசாங்கத்திற்கு கால நீடிப்பபை வழங்க கூடாது என தெரிவித்தும் வடக்கு கிழக்கு வலிந்து காணமலாக்கப்பட்டவர்களின் குடும்ப அங்கத்தவர்கள் ஒன்றிணைந்து கவனயீர்ப்பு பேரணியையும் கதவடைப்பு போராட்டத்தையும் நடத்த உள்ளனர். இதற்கு கிழக்கு பல்கலைக்கழக மாணவர் சமூகம் முழு ஆதரவினை வழங்கி நிற்கின்றது. 

தமிழின மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு இலங்கை அரசாங்கம் பதில் கூறவேண்டிய நாளினை வெகு சீக்கிரமாய் வென்றெடுப்பதையும், இலங்கை அரசாங்கத்தின் இனவெறி துவேசத்தினை சர்வதேசத்திற்கு வெளிச்சமிட்டுக் காட்டுவதையும் நோக்கமாக கொண்டு 19.03.2019 அன்று மக்கள் எழுச்சிப் போராட்த்தினை முன்னெடுக்க தீர்மானித்துள்ளோம். எனவே நீதிக்கான எமது மக்கள் எழுச்சிப் பேரணிக்கு தமிழ் பேசும் எமது மக்கள் அனைவரையும் ஒருமித்த சக்தியாய் பலத்த குரல் கொடுக்க ஒன்றிணையுமாறும், பேரணிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் பொது அமைப்புக்கள் மற்றும் மதகுருமாரை வேண்டிக்கொள்கின்றோம்.