மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை சுவீகரிக்கும் உரிமை அரசாங்கத்திடம் இல்லை – ஹிஸ்புல்லாஹ்

மட்டக்களப்பு, வாழைச்சேனையின் புனானையில் நிர்மாணிக்கப்படும் மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தை சுவீகரிக்கும் உரிமை அரசாங்கத்திடம் இல்லை என கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்

உயர் கல்வி அமைச்சில் பட்டமளிப்பு நிறுவகத்துக்கான பிரிவில் பதிவு செய்யப்பட்டு வர்த்தமானி ஊடாக மட்டக்களப்பு பல்கலைக்கழகம் குறித்த அறிவிப்பு வெளியிடப்படவில்லை என தெரிவித்த அவர், இதன் காரணமாக பல்கலைக்கழகத்தை அரசாங்கங்கத்தால் சுவீகரிக்க முடியாது என்று குறிப்பிட்டார்.

குறித்த கல்வி நிறுவனம் தொடர்பாக ஆய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் உறுப்பினர்கள் இன்று (வெள்ளிக்கிழமை) கண்காணிப்புக்காக அந்த கல்வி நிறுவகத்திற்கு சென்றிருந்தனர். இதன்போது செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அத்துடன், சைட்டம் கல்லூரி வர்த்தமானி அறிவிப்பின் ஊடாக வெளியிடப்பட்டதன் மூலமே அரசாங்கத்தினால் சுவீகரிக்க முடிந்தது என்று சுட்டிக்காட்டிய அவர், மட்டக்களப்பு பல்கலைக்கழகத்தையும் அவ்வாறு வர்த்தமானியில் அறிவிக்குமாறு கோரியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.