மகா சங்கத்தின் ஆலோசனைகளை பின்பற்றினால் நாடு தவறான பாதையில் செல்லாது


மஹாசங்கத்தினரின் ஆலோசனைகளை ஏற்று அதற்கமைய ஆட்சியாளர்கள் செயற்பட்டால் நாடு ஒருபோதும் தவறான பாதையில் பயணிக்காதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். பௌத்த கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட அரச கொள்கையே நாட்டில் நடை முறைப்படுத்தப்பட வேண்டும்.

உலக நாடுகளின் தற்போதைய அசாதாரண நிலைமைகளை கவனத்திற்கொள்ளும்போது எமது நாட்டில் சகல இனத்தவர்களும் மதத்தவர்களும் சுதந்திரமாக வாழக்கூடிய சூழலொன்று கட்டியெழுப்பப்பட்டுள்ளமைக்கு பௌத்த கோட்பாடுகளின் அடிப்படையிலான மனிதநேய வழிகாட்டுதல்களே காரணமென்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அங்குரங்கெத்த, மாதன்வல ரஜமஹா விகாரையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள தூபியில் புனித சின்னங்களை பிரதிஷ்டை செய்யும் புண்ணிய நிகழ்வில் நேற்று (18) பிற்பகல் கலந்துகொண்டபோதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதனைத் தெரிவித்தார்.

வரலாற்று ரீதியான பல சிறப்புக்களைக் கொண்ட மாதன்வல ரஜமஹா விகாரைக்கு நேற்று பிற்பகல் விஜயம் செய்த ஜனாதிபதி, முதலில் சமய அனுஷ்டானங்களில் ஈடுபட்டு ஆசீர்வாதங்களை பெற்றுக்கொண்ட பின்னர் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட தூபியில் புனித சின்னங்களை பிரதிஷ்டை செய்யும் புண்ணிய நிகழ்வில் கலந்துகொண்டார்.