மின்னல் தாக்கியதில் விவசாயி உயிரிழப்பு


மட்டக்களப்பு, செங்கலடி பகுதியில் இடி, மின்னல் தாக்கியதில் விவசாயி ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் செங்கலடி, சந்தை வீதியைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி ஆனந்தன் (வயது 40) என்பவரே உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் நேற்று மாலை பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்துள்ளது.

இதன்போது, மட்டக்களப்பு– பங்குடாவெளி, பெரியவெட்டை எனும் பகுதியிலுள்ள வயற் பிரதேசத்தில் வேலை செய்து கொண்டிருந்த குறித்த விவசாயி, இடி, மின்னல் தாக்கத்திற்கு உள்ளாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில் உயிரிழந்தவரின் உடல், பிரேத பரிசோதனைக்காக செங்கலடிப் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை செங்கலடி பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.