இரகசிய புலனாய்வுப் பிரிவினர் என கூறி வீட்டில் கொள்ளை: மூவருக்கு விளக்கமறியல்

அக்கரைப்பற்று – பதூர் பள்ளி வீதியிலுள்ள வீடொன்றில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்று பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.


அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதியும் மேலதிக நீதவானுமாகிய பி.சிவகுமார் முன்னிலையில் சந்தேகநபர்கள் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன்போது, எதிர்வரும் 14 ஆம் திகதி வரை சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கண்டியை சேர்ந்த மூன்று சந்தேகநபர்களே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இந்த திருட்டுச் சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேகநபர் தேடப்பட்டு வருவதாக பொலிஸார் கூறினர்.

பிபிலை பகுதியை சேர்ந்த இராணுவ வீரர் ஒருவரே தேடப்படுவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

பதூர் பள்ளி வீதியில் உள்ள வீடொன்றிற்கு நேற்று முன்தினம் (09) மாலை வேனில் சென்றிருந்த மூவர் தம்மை இரகசிய புலனாய்வுப் பிரிவினர் என கூறி வீட்டிலிருந்த 26 பவுன் நகைகள் மற்றும் 408,000 ரூபா பணம் ஆகியவற்றை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.

சந்தேகநபர்கள் பயணித்த வேன் அடையாளம் காணப்பட்டதை அடுத்து மூன்று சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்