வடக்கு-கிழக்கு இணைப்பை மோடியிடம் கூட்டமைப்பு வலியுறுத்தவேண்டும்- சுரேஷ் பிரேமச்சந்திரன்



வடக்கு- கிழக்கு பிரதேசம் முஸ்லிம் அடிப்படைவாதிகளின் தளமாக இருக்கக் கூடாது.அவ்வாறான நிலைமை உருவானால் அது இலங்கைக்கு மட்டுமல்ல நட்பு நாடான இந்தியாவின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக அமையும் என தெரிவித்துள்ள ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், எனவே வடக்கு- கிழக்கு இணைந்து இருப்பதே அவசியமாகும். இதனை இலங்கை வரவுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இடித்துரைக்க வேண்டும் என வும் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் இன்று அவர் நடத்திய ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

இலங்கையில் சர்வதேச பயங்கரவாதம் தலைதூக்கியுள்ளது.சில முஸ்லிம் அடிப்படைவாத அமைப்புக்களின் தாக்குதல்களினால் அப்பாவி மக்கள் பலர் கொல்லப்பட்டுள்ளனர்.இவ்வாறான நிலையில் இந்திய பிரதமராக மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ள நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.அவர் ஜனாதிபதி,பிரதமர்,கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஆகியோரை சந்திக்கவுள்ளார்.

நாட்டில் நடைபெற்ற தாக்குதல்கள் தொடர்பில் இந்திய புலனாய்வு பிரிவினர் எச்சரிக்கை விடுத்திருந்ததாக கூறப்படுகின்றது.மேலும் இந்தியாவில் பயிற்சி பெற்ற அமைப்பினர் சிலரும் இதில் தொடர்புபட்டுள்ளதாக கூறப்பட்டு வருகின்ர்டது.இந்த தாக்குதல் சம்பவங்களின் பின்னர் சர்வதேச பயங்கரவாத தீவிரவாதத்தை ஒழிக்க நட்பு நாடு என்ற ரீதியில் சகல உதவிகளையும் வழங்குவதாக இந்தியா உறுதியளித்துள்ளது.வடக்கு கிழக்கு இணைக்கப்பட வேண்டும் அதன் முக்கியத்துடன் என்ன என்பது தொடர்பில் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் இந்திய பிரதமருக்கு எடுத்துரைக்க வேண்டும்.