கல்முனை மாநகர முதல்வர் றகீப் அவுஸ்திரேலியா விஜயம்



(அஸ்லம் எஸ்.மௌலானா)

கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்கள் அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். கடந்த சனிக்கிழமை (17) அவர் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து பயணமானார். 

இவ்விஜயத்தின் முதற்கட்டமாக அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் அமைந்துள்ள ஆர்.எம்.ஐ.ரி. பல்கலைக் கழகத்தில் கடந்த 18ஆம் திகதி ஆரம்பமான உள்ளூராட்சி நிர்வாக முறைமை தொடர்பிலான செயலமர்வில் முதல்வர் றகீப் பங்குபற்றி வருகின்றார். எதிர்வரும் 28ஆம் திகதி வரை இச்செயலமர்வும் அதனைத் தொடர்ந்து களச்சுற்றுப் பயணங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மாநகர சபைகளின் சொத்து நிர்வாகம், ஸ்மார்ட் சிட்டி கட்டுமாணம், திண்மக் கழிவகற்றல் சேவையில் எதிர்நோக்கும் சவால்களை வெற்றி கொள்ளல் மற்றும் நிலைபேறான அபிவிருத்தி போன்ற விடயங்கள் குறித்து இந்த செயலமர்வில் ஆராயப்பாட்டு வருகின்றன. இதில் துறைசார் நிபுணர்களும் பல்கலைக்கழக பேராசிரியர்களும் வளவாளர்களாக கலந்து கொண்டு, குறித்த விடயங்கள் தொடர்பில் விரிவுரை மற்றும் தெளிவூட்டல்களை வழங்கி வருகின்றனர்.

இவ்விஜயத்தின் இரண்டாம் கட்டமாக மேற்படி பல்கலைக்கழகத்தின் வழிகாட்டலில் இடம்பெறவுள்ள அவுஸ்திரேலியாவின் முக்கிய நகரங்களுக்கான களச்சுற்றுப் பயணங்களில் கல்முனை மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப் அவர்கள் கலந்து கொள்ளவிருப்பதுடன் சில முக்கிய நகர முதல்வர்களுடன் பிரத்தியேக சந்திப்புகளை நடாத்தி, கல்முனை மாநகர அபிவிருத்திக்கான ஒத்துழைப்புக்களைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவுள்ளார்.