சவேந்திர நியமனம்; தமிழரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது - கூட்டமைப்பு அதிருப்தி; கண்டனம்

தமிழ்க்கூட்டமைப்பு அதிருப்தி; கண்டனம்

புதிய இராணுவத் தளபதியாக சவேந்திர சில்வா நியமிக்கப்பட்டமையை கண்டிக்கின்றோம். இந்த நியமனமானது தமிழ் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இராணுவத் தளபதியாகவிருந்த லெப்டினட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க ஓய்வுபெற்றதைத் தொடர்ந்து, புதிய இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று நியமித்திருந்தார். இந்த நியமனம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இந்தக் கண்டனத்தை முன்வைத்தார். மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா என்ற நபர் குறித்து கடந்த காலங்களில் பல போர்க்குற்றச்சாட்டுக்கள் பதிவாகியுள்ளன.

குறிப்பாக தமிழ் மக்களுக்கு மிகவும் அச்சுறுத்தலான நபராக அவர் அடையாளபடுத்தப்பட்டுள்ளார். ஐக்கிய அமெரிக்க தூதரகம் கூட அவர்களின் அறிக்கையில் தமது கண்டனத்தை வெளியிட்டுள்ளனர்.

அவருக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் அதுவும் நம்பத்தகுந்த வகையில் உள்ள நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவரை இராணுவத் தளபதியாக நியமித்துள்ளமை குறித்து எமது கண்டனத்தை தெரிவிக்கின்றோம்.

இந்த நியமனம் எமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றும் சுமந்திரன் குறிப்பிட்டார்.