2020 ஆண்டு வரவு செலவுத் திட்டத்தை 2019ஆம் ஆண்டில் முன்வைக்காதிருக்க அரசாங்கம் தீர்மானம்

இவ்வருட இறுதியில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவிருப்பதால் 2020ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை 2019ஆம் ஆண்டில் முன்வைக்காதிருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்;

ஜனாதிபதி தேர்தலுக்குப் பின் பாராளுமன்றம் கலைக்கப்படுவது தொடர்பில் கட்சி தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களே தீர்மானிக்க வேண்டும் என்றும் பாராளுமன்றத்தில் பிரதமர் இன்று கூறினார்.
இவ்வருட இறுதிப்பகுதியில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவிருப்பதால் 2020ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் அவ்வாண்டின் ஆரம்பப் பகுதியில் முன்வைக்கப்படும் இதேவேளை 2020ஆம் ஆண்டிற்கான செலவுக்களுக்காக இடைக்கால ஒதுக்கீட்டு சட்டமூலம் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படும் என்றும் பிரதமர் கூறினார்.

தேவையற்ற செலவினங்களைக் குறைத்து ஆரம்ப மிகைப் பெறுமானத்துடன் எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படும் . நாட்டின் சிக்கல் நிலைமைகளை மிகவும் வினைத்திறனாக சமாளிக்க அரசாங்கத்தால் முடிந்திருப்பதாக பிரதமர் குறிப்பிட்டார். நாட்டின் பொருளாதார நிலை தற்போது பாதுகாப்பாகவும் நல்ல நிலைமையிலும் இருப்பதாக பிரதமர் சுட்டிக்காட்டினார்.

பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க இது தொடர்பில் கேள்வி எழுப்பியிருந்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் சிட்னி ஜயரட்ன கேட்ட வைத்த கேள்விக்கு பதில் அளித்த பிரதமர் மக்களின் அன்றாட நடவடிக்கைகளுக்கு பாதகம் ஏற்படுத்தும் காட்டு யானைகளை கட்டுப்படுத்துவதற்கான நிலையம் ஒன்று அமைக்கப்படும் இவ்வாறான நிலையம் தற்போது ஹொரவப்பொத்தான பிரதேசத்தில் அமைப்பதற்கான வேலைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.