தமிழ் சகோதரர்களுக்கு தனியான பிரதேச செயலகம் வழங்குவதற்கும் சாய்ந்தமருது மக்களுக்கு நகரசபை வழங்குவதற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை.

பாறுக் ஷிஹான்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கல்முனையை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் ஆதரிக்கும் வேட்பாளருக்கு எதிராக சாய்ந்தமருது மக்கள் வாக்களித்து கல்முனை தொகுதியை மண் கெளவச் செய்து தமது எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும் சாய்ந்தமருது   மாளிகைக்காடு ஜும்ஆப் பள்ளிவாசல் தலைவர் அல்ஹாஜ் வை.எம்.ஹனீபா தெரிவித்தார்.

இவ்வாறு சாய்ந்தமருதிற்கான தனியான நகரசபை போராட்டத்தின் தற்போதய நிலவரம் தொடர்பாக ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் மாநாடொன்று   வெள்ளிக்கிழமை (4) தனியார் விடுதி ஒன்றில்  இடம்பெற்ற போது உரையாற்றிய மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்

சாய்ந்தமருது மக்களின் நியாயமான போராட்டத்திற்கு அம்பாறை மாவட்டத்திலுள்ள அனைத்து அரசியல் வாதிகளும் ஆதரவு வழங்கும் அதே வேளை சாய்ந்தமருது மக்களின் கூடுதலான வாக்குகளை பெற்று தொடர்ந்து வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்ற முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் அவர்கள் மட்டும்  நகரசபை கிடைப்பதற்கு தொடச்சியாக தடையாக இருந்து வருகின்றமை பெரும் மன வேதனையை தருகின்றது.

கல்முனையிலுள்ள தமிழ் சகோதரர்களுக்கு தனியான பிரதேச செயலகம் வழங்குவதற்கும் சாய்ந்தமருது மக்களுக்கு நகரசபை வழங்குவதற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை.

சாய்ந்தமருதிற்கான தனியான நகரசபையை எந்த அரசியல்வாதி ஜனாதிபதி தேர்தலுக்கு முன் பிரகடனப்படுத்துகின்றாரோ அவருக்கு சாய்ந்தமருது மக்களின் இருபதாயிரம் வாக்குகளுடன் அயல் பிரதேசங்களிலுள்ள மக்களின் வாக்குகளும் சேர்ந்து ஐம்பதினாயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் கிடைக்கும் என தெரிவித்தார்.