சேவைக்கு சமூகம் அளிக்காத ஊழியர்கள் அனைவரும் சேவையில் இருந்து விலகியதாக கருதப்படுவார்கள்


எந்தவித அறிவிப்பும் இன்றி சேவைக்கு சமூகம் அளிக்காத ரயில்வே ஊழியர்கள் அனைவரும் சேவையில் இருந்து விலகியதாக கருதப்படுவார்கள் என போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை பயணிகளின் நம்மை கருதி நாளை முதல் ரயில்வே பொறியியலாளர்களை பயன்படுத்தி ரயில்களை இயக்கச் செய்வதாக அந்த சங்கம் அறிவித்துள்ளது.

எவ்வாறாயினும் ரயில்வே ஊழியர்கள் தொடர்ந்தும் ஏழாவது நாளாக இன்று முன்னெடுத்த பணி பகிஷ்கரிப்பால் பயணிகள் பெரும் அசௌகரியத்திற்கு உள்ளாகினர்.

ரயில்வேயின் ஆறு பிரிவுகளை சேர்ந்த தொழிற்சங்கங்கள் கடந்த மாதம் 25 ஆம் திகதி முதல் முன்னேடுக்கும் போராட்டம் இன்று எழாவது நாளாகவும் முன்னெடுக்கப்படுகின்றது.

இதற்கமைய இன்றும் காலை வேளையில் 12 ரயில்கள் மாத்திரம் சேவையில் ஈடுபடுத்தப்பட்டன.

இந்த நிலையில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் அசோக அபேசிங்க அறிவித்தல் எதுவுமின்றி சேவைக்கு சமூகம் அளிக்காத ஊழியர்கள் அனைவரும் சேவையில் இருந்து விலகியதாக கருதப்படுவர் என கூறினார்.

இதேவேளை தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு தமது பொறியியலாளர்களை ஈடுபடுத்தி நாளை முதல் ரயில் சேவையை முன்னெடுக்க எதிர்பார்ப்பதாக ரயில்வே பொறியியலாளர்கள் சங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடதக்கது.