வெடிபொருள் பயன்படுத்தி பிடிக்கப்பட்ட ஒருதொகை மீன் மீட்பு


திருகோணமலை, சின்னவேலி பகுதியில் வெடிபொருள் பயன்படுத்தி பிடிக்கப்பட்ட 70 கிலோகிராம் மீன் கடற்படையினரால் நேற்று (14)மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் கிழக்கு கடற்படை கட்டளை பிரிவினர்  மேற்கொண்டசோதனை நடவடிக்கையின்போது சந்தேகத்திற்கிடமான டிங்கி படகொன்றை கண்டுபிடித்தனர்.

தொடர்ந்து கடற்படையினர் தேடுதல் மேற்கொண்டபோது, சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட மீன் குறித்த படகில் காணப்பட்டது.

இதன் பின்னர் டிங்கி படகு, மீன் உள்ளிட்டவை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதோடு, மேலதிக நடவடிக்கைகளுக்காக  திருகோணமலை மீன்பிடித் திணைக்கள உதவிப் பணிப்பாளர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டதாக, கடற்படையினர் தெரிவித்தனர்.

தமது சோதனை நடவடிக்கையின்போது, இவ்வாறு பிடிக்கப்பட்ட மீன்களை கைவிட்டு சந்தேகநபர்கள் தப்பிச் சென்றுள்ளதாக நம்பப்படுவதாக, கடற்படையினர் தெரிவித்தனர்.