266 தேர்தல் கண்காணிப்பாளர்கள் களத்தில்



ஜனாதிபதி தேர்தலை கண்காணிப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியம், பொதுநலவாய நாடுகள் உட்பட பல நாடுகளிலிருந்து 266 வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்கள் வருகை தந்திருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு உயரதிகாரி ஒருவர்  தெரிவித்தார்.

தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவரின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் 7 நாடுகளிலிருந்து 16 கண்காணிப்பாளர்கள் வருகை தந்துள்ளனர். இந்தியா, மாலைதீவு, இந்தோனேசியா, தென்னாபிரிக்கா, பங்களாதேஷ், பிலிப்பைன், பூட்டான் ஆகிய ஏழு நாடுகளுக்கே ஆணைக்குழுத்தலைவர் உத்தியோகபூர்வ அழைப்பை விடுத்திருந்தார்.

இதுதவிர ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலிருந்து 80கண்காணிப்பாளர்களும், பொது நலவாய நாடுகளிலிருந்து 135கண்காணிப்பாளர்களும் ஆசிய தேர்தல் வலையமைப்பிலிருந்து 35கண்காணிப்பாளர்களுமாக 250பேர் வருகை தந்துள்ளனர்.

இவர்கள் சுயாதீனமான கண்காணிப்பாளர்களாகவே செயற்படவுள்ளனர். வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்களுடன் உள்நாட்டுக் கண்காணிப்பாளர்களும் இணைந்து இன்று முதல் நாட்டின் பல பகுதிகளுக்கும் சென்று அவதானிப்புக்களை மேற்கொள்ளவுள்ளனர்.

வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்கள் தேர்தல் முடியும் வரை இங்கிருந்து மேற்கொள்ளும் கண்காணிப்புகள் தொடர்பான தமது அவதானிப்பு அறிக்கைகளை தமது நாடுகளுக்குத் திரும்பியதன் பின்னரே வெளியிடுவார்கள் எனவும் தெவிக்கப்பட்டுள்ளது.