விமானத்துக்கு வெடிகுண்டு வைப்பதாக அச்சுறுத்தல் விடுத்த இங்கை பிரஜையின் தண்டனைக்காலம் குறைப்பு!



விமானத்தை வெடிகுண்டு வைத்து வெடிக்கச் செய்வதாக அச்சுறுத்தல் விடுத்த குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இலங்கைப் பிரஜையொருவின் விளக்கமறியல் காலம் குறைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் இருந்து கோலாலம்பூர் புறப்பட்ட மலேசிய விமானத்தில் மனோத் மார்க்ஸ் என்ற இலங்கையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கையில் வெடிகுண்டு போன்ற ஒரு பொருளுடன் விமானியின் அறைக்குள் அத்துமீறி நுழைய முயன்று, விமானத்துக்கு வெடிகுண்டு வைக்கப்போவதாக அச்சுறுத்தல் விடுத்தார்.

எனினும் சாதுரியமாக செயல்பட்ட பயணிகள் அந்த நபரை பிடித்து விமான இருக்கையில் கட்டி வைத்தனர். சம்பவத்தை அடுத்து விமானம் மீண்டும் மெல்போர்னுக்கு திருப்பப்பட்டது.

அங்கு விமான நிலையத்தில் பொலிஸார் குறித்த நபரை கைது செய்தனர். விசாரணை நடத்தியதில் அவர் மன நோயினால் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்றவர் என தெரியவந்துள்ளது.

அவர் கையில் வைத்திருந்தது ப்ளுடூத் என தெரிவித்துள்ள பொலிஸார், இந்த சம்பவத்தில் தீவிரவாத நோக்கம் எதுவும் இல்லை எனவும் விசாரணையில் தெரிவித்தனர்.

மெல்போர்னுக்கு திரும்ப கொண்டு வரப்பட்ட பயணிகள் உரிய ஓய்வுக்கு பின்னர் வேறு விமானத்தில் கோலாலம்பூர் புறப்பட்டனர்.

எனினும் இந்த விமானத்தை திசை திருப்பி, பயணிகளை அச்சுறுத்திய குற்றச்சாட்டு தொடர்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் மெல்போர்னில் அவருக்கு 12 வருடம் விளக்கமறியல் விதிக்கப்பட்டது.

இந் நிலையில் அவர் பாரதூரமான மனநல பாதிப்புக்கு உள்ளானவர் என்று நீதிமன்றில் மேன்முறையீட்டு அடிப்படையில் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, அவருக்கான தண்டனை 8 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 5 ஆண்டுகளில் அவரால் பிணை பெற முடியும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.