எதிர்க்கட்சி விவகாரம் – சஜித்திற்கு வாழ்த்து தெரிவித்தார் மஹிந்த



எதிர்க்கட்சித் தலைவராக முன்னாள் அமைச்சர் சஜித் பிரேமதாச நியமிக்கப்படுவாராக இருப்பின் அவருக்கு வாழ்த்தினை தெரிவித்துக்கொள்கின்றேன் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

அத்தோடு மக்களுக்கு நன்மை பயக்கும் விதமாகவே தமது தேர்தல் கொள்கை பிரகடனம் காணப்பட்டதென்றும் அதே தற்போது நடைமுறைப்படுத்தப்படுகின்றது என்றும் பிரதமர் தெரிவித்தார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஸ்ரீ மகாபோதி ருவன்வெளிசாய, மிரிஷ்வெடிய, ஜயன்தி விஹார ஆகிய விகாரைகளில் மத வழிப்பாட்டில் ஈடுப்பட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், “ஜனாதிபதி தேர்தல் கொள்கை பிரடகடனத்தில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்க நன்மை பயப்பதாக காணப்பட்டது. குறிப்பிடப்பட்ட விடயங்கள் தற்போது செயற்படுத்தப்படுகின்றன.

அரசாங்கத்தின் குறுகிய கால நடவடிக்கைகளில் நாட்டு மக்கள் குறைந்தளவேனும் நன்மை பெற்றுள்ளார்கள். மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும்

உள்ளூர் உற்பத்தியாளர்களின் நன்மை கருதி மீள் ஏற்றுமதி பயிர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் விவசாயத்தை பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுகின்றது. தேர்தல் கொள்கை பிரகடனத்தில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் அனைத்தும் தொடர்ந்து செயற்படுத்தப்படும்” என்றும் அவர் கூறினார்.