தமிழர்களுக்கான தீர்வு அரசாங்க நிகழ்ச்சி நிரலில் இல்லை : மாவை சேனாதிராஜா


கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமையிலான இடைக்கால அரசாங்கம் இனப்பிரச்சினைக்கு அவர்களின் கொள்கைகளில் முன்னுரிமை அளிக்கவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

இந்த விடயம் குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ள மாவை சேனாதிராஜா, ஜனாதிபதி ராஜபக்ஷவின் தேர்தல் அறிக்கையில் இனப் பிரச்சினை கூட குறிப்பிடப்படவில்லை எனத் தெரிவித்தார்.

மேலும் நல்லிணக்கம் குறித்து பேசிய மாவை சேனாதிராஜா, நல்லிணக்கம் என்பது அரசாங்கத்தை மட்டுமே சார்ந்துள்ளது என்பதை சுட்டிக்காட்டினார். ஆனால் இதுவரை, இந்த விடயத்தில் அரசாங்கம் எந்தக் கொள்கையையும் குறிப்பிடவில்லை என்றும் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

அத்தோடு இந்த விவகாரங்கள் தொடர்பாக முந்தைய அரசாங்கத்துடன் நடத்தப்பட்ட கலந்துரையாடல்களை எடுத்துரைத்த சேனாதிராஜா, “தமிழர்களின் பிரச்சினைகளை புதிய அரசியலமைப்பு மூலம் மட்டுமே தீர்க்க முடியும் என வலியுறுத்திய அவர், புதிய அரசாங்கம் தயாராக இருந்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்துடன் பேசத் தயாராகவே உள்ளது” என்றார்.