குடத்தில் தண்ணீர் சுமந்து பயிர்களுக்கு நீர் ஊற்றி வளர்த்து வந்த காய்க்கும் பருவத்திலுள்ள பயிர்களை அழிக்கும் யானைகள்! உயிர் அச்சத்தில் மக்கள்!


(எஸ்.எம்.எம்.முர்ஷித்)
ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மஜ்மாநகர் மீள்குடியேற்றக் கிராமத்திற்குள் புகுந்த யானைகளினால் வீட்டுத் தோட்ட பயிர்கள் சேதமாக்கப்பட்டுள்ளது.


மஜ்மாநகர் மீள்குடியேற்றக் கிராமத்திலுள்ள தோட்டங்களிற்குள் சனிக்கிழமை இரவு மூன்று யானைகள் வேலியை உடைத்து உட்புகுந்து காய்க்கும் பருவத்திலுள்ள பதினெட்டு தென்னை மரங்கள் மற்றும் பலா மரங்கள் என்பவற்றை சேதப்படுத்தியுள்ளது.

யானைகள் காயக்கும் தருவாயிலுள்ள பயிர்களை சேதப்படுத்தும் சத்தம் கேட்டு வெளியில் வந்து பார்வையிட்ட போது யானைகள் பயிர்களை துவம்சவம் செய்வதை கண்டதும் கூச்சலிட்டு பயத்திற்கு மத்தியில் துரத்தியதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

தோட்டத்திலுள்ள பயிர்களை வளர்ப்பதற்கு குடத்தில் தண்ணீர் சுமந்து பயிர்களுக்கு நீர் ஊற்றி வளர்த்து வந்த பயிர்களை யானை சேதப்படுத்தியுள்ளது. அத்தோடு இப்பகுதியில் பல குடும்பங்கள் பயத்திற்கு மத்தியில் வசித்து வருவதுடன், யானைகளினால் உயிர் ஆபத்துக்கள் ஏற்படும் என்ற அச்சமும் உள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த கிராமத்தினை அண்மித்து பிரதேச சபைகளிகளால் சேகரிக்கப்படும் குப்பைகளை திண்மக் கழிவு முகாமைத்துவ நிலையத்தில் கொட்டப்படுவதால் யானைகளில் எழும்பு எச்சங்களை உண்பதற்கு வருவதால், அதனூடாக ஊடறுத்து தற்போது கிராமங்களுக்கும் வருகை தரும் நிலைமை காணப்படுகின்றது.

எனவே குறித்த பகுதியில் விவசாயம் மற்றும் தோட்டங்கள் என்பவற்றை ஜீவனோபாய தொழிலாக மேற்கொள்ளும் பொதுமக்களுக்கும், குடியிருப்பாளர்களும் நிம்மதியாக வாழ்வதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூடிய கவனம் செலுத்தி யானை வேலியை அமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.