மன்னார் எழுத்தூர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில் ஒரு பகுதி கைப்பற்றப்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எஸ்.கிருஷாந்தன் தெரிவித்தார்.
மன்னாரில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், மன்னார் எழுத்தூர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தம்பதியினரை கட்டி வைத்து விட்டு சுமார் 25 பவுண் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக மன்னார் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.
இதற்கமைவாக மன்னார் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் பந்துல வீரசிங்கவின் பணிப்புரைக்கு அமைவாக மன்னார் பொலிஸார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
அதற்கமைவாக யாழ்ப்பாணத்தில் வைத்து பிரதான சந்தேக நபர் ஒருவர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டனர்.
கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை ஈடுவைக்கச் சென்ற போது குறித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.அவர்களில் ஒருவர் கொள்ளைச் சம்பவத்துடன் நேரடியாக தொடர்புபட்டவர் என ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வருகிறது. தொடர்ந்தும் பொலிஸார் தீவிர விசார ணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.