ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர் பதுர்தீன் கல்குடாவுக்கு துரோகம் இழைக்க மாட்டார் - அமீர் அலி எம்.பி புகழாரம்.

(எச்.எம்.எம்.பர்ஸான்)
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஐ.எல். பதுர்தீன் கல்குடாவுக்கு துரோகம் இழைக்க மாட்டார் என்று பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.ஓட்டமாவடி - மீராவோடை அமீர் அலி வித்தியாலயத்தின் 3வது வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டியின் இறுதிநாள் நிகழ்வு பாடசாலை முன்றலில் செவ்வாய்க்கிழமை (25) பாடசாலையின் அதிபர் எம்.மஹ்ரூப் தலைமையில் நடைபெற்றது அதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பேசும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்தும் பேசுகையில்,
பிரதேச சபை உறுப்பினர் பதுர்தீன் எங்களோடு அரசியலில் நீண்டகாலம் பயணித்தவர். ஆனால் ஏதோவொரு காரணத்துக்காக அவர் கடந்த தேர்தலிலே எங்களோடு சற்று தள்ளி நின்றாலும் வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் அவர் கல்குடாவை காட்டிக் கொடுப்பதற்கு தயாராக இல்லாமல் இருக்கின்ற ஒரு தலைவன் என்பதை இந்த இடத்தில் நான் அவரை கெளரவமாக சொல்லியாக வேண்டும் என்று அந்நிகழ்வில் விஷேட அதிதியாக கலந்து கொண்ட பிரதேச சபை உறுப்பினர் பதுர்தீன் அவர்களின் முன்நிலையில் தெரிவித்தார்.

எத்தனையோ பேர் அரசியலில் உள்ளார்கள் அவர்கள் கள்ளத்தனமாகவும், கபடத்தனமாகவும் செயற்படுகின்றனர் அவர்களுக்குள் சகோதரர் பதுர்தீன் தெளிவானவர்.

பதுர்தீன் அவர்கள் கல்குடாவின் அரசியலை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக மிகவும் உறுதியாக செயற்பட இருக்கின்ற அந்த நிகழ்வானதை கல்குடாவில் இருக்கின்ற எல்லோரும் அவரை கெளரவமாக மதிக்க வேண்டும். அவருடைய முயற்சிகள் எதிர்காலத்திலே கைகூட வேண்டும் என்று நான் பிரார்த்திக்கின்றேன் என்றார்.