நாசிவன்தீவு முதியவர்களுக்கான மொபைல் சேவை !

(ஜெ.ஜெய்ஷிகன்) 
கோறளைப்பற்று, வாழைச்சேனை பிரதேச செயலகத்தினால் கடந்த 24.02.2020ஆம் திகதி திங்கட்கிழமை நாசிவன்தீவு பிரதேச முதியோர், மற்றும் மாற்றுத்திறனாளிகள் தொடர்பில் பல்வேறு பிரச்சினைகளுக்கு இடம்பெயர் சேவை மூலம் உடனடித் தீர்வு காணப்பட்டது. 
பிரதேச செயலாளர் கோ.தனபாலசுந்தரம் அவர்களின் வழிகாட்டலில் நடைபெற்ற நிகழ்வுக்கு உதவிப்பிரதேச செயலாளர் திருமதி.நிருபா பிருந்தன், பதில் சமூகசேவை உத்தியோகத்தர் க.ஜெகதீஸ்வரன், அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.சந்திரகுமரன், கிராம சேவை உத்தியோகத்தர் கா.ஜெகதீஸ்வரன் மற்றும் கறுவாக்கேணி சமூகபராமரிப்பு நிலைய உத்தியோகத்தர்கள், முதியோர் சங்கங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு கொண்டிருந்தனர். 

சமூகசேவைத் திணைக்களத்தினால் வழங்கப்படுகின்ற சேவைகள் தொடர்பில் முதியோரகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முதலில் தெளிவூட்டப்பட்டது. 60 வயதிற்கு மேற்பட்ட 24 முதியோர்களுக்கு அவ்விடத்திடத்திலேயே முதியோர் அடையாள அட்டை வழங்கப்பட்டது. அனைத்;து முதியோர்களுக்கும் இலவசமாக போட்டோ எடுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. 08 முதியோர்களுக்கான பொதுசன மாதாந்த உதவிக் கொடுப்பனவும் வழங்கப்பட்டது. 

10 சிரேஸ்ட்ட பிரஜைகளுக்கு நுளம்பு வலைகளும் 06 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு புத்தகப்பைகளும், 02 முதியோர்களுக்கு உணவுப் பொதி மற்றும் கற்றல் உபகரணங்களும் வழங்கப்பட்டது. கண்பார்வை குறைபாடுடையவர்களுக்கு கண்ணாடி மற்றும் உபகரணங்களும் வழங்குவதற்குரிய நடிவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.