கடமையில் இருந்த பொதுச் சுகாதார பரிசோதகர் ஒருவர் மீது கத்தி குத்து


கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பொதுச் சுகாதார பரிசோதகர் ஒருவர் கத்திக் குத்துக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று முன் தினம் பிற்பகல் 3.00 மணியளவில், ரம்புக்கணை, பத்தம்பிட்டிய பிரதேசத்தில் பணியில் ஈடுபட்டிருந்த ரம்புக்கணை, பொதுச் சுகாதார அலுவலகத்தில் பணிபுரியும் பொதுச் சுகாதார பரிசோதகரை இவ்வாறு காயமடைந்துள்ளார்.

அவரது பணிக்கு இடையூறு விளைவித்துள்ள சிறுவன், ஒருவர், அவரை கத்தியால் தாக்கி காயப்படுத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.

தாக்குதலில் காயமடைந்த பொது சுகாதார அதிகாரி ரம்புக்கணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

சந்தேகநபர் அப்பகுதியில் வசிக்கும் 15 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சந்தேக நபர் தப்பியோடி தற்போது குறித்த பிரதேசத்திலுள்ள காட்டுப் பகுதியில் பதுங்கியுள்ளதாக கிடைக்கப் பெற்றுள்ள தகவலின் அடிப்படையில், பொலிஸ் குழுக்கள் தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.

சந்தேகநபருக்கு எதிராக சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.