சகோதரர்கள் இருவர் நடத்திவந்த கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை ; மூவர் கைது !


திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சமாச்சத்தீவு பிரதேசத்தில் இன்று அதிகாலை கசிப்பு உற்பத்தி நிலையமொன்று சுற்றிவளைக்கப்பட்டதையடுத்து மூவர் கைதுசெய்யப்பட்டதுடன்  ஒரு தொகை போதைபொருட்கள் கைபற்றப்பட்டதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.

நீண்டகாலமாக இயங்கிவந்த இரு சகோதரர்களின் கசிப்பு உற்பத்தி நிலையமே இவ்வாறு முற்றுகைக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முற்றுகைக்குள்ளான கசிப்பு உற்பத்தி நிலையத்தில் 80 லீற்றர் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தும் கோடாவும், 65 லீற்றர் கசிப்பு 3 பெரல்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன் போது, கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் குட்டிக்கராச்சி பிரதேசத்தை சேர்ந்த சகோதரர்களான (வயது 40,35) இருவருடன் உதவியாளரான பைசல் நகர் பிரதேச வாசியான(வயது 38) நபரும் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கு பொலிஸ் பிணை வழங்கப்பட்டதாக கிண்ணியா பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.