மட்டக்களப்பில் தேர்தல் கடமை அரசசேவை பணியாளர்களுக்கு அறிவூட்டல்கள் வழங்கப்படுகிறது


(மட்டக்களப்பு சிஹாறா லத்தீப்)
தேர்தல் ஆணையகத்தின் அறிவுறுத்தளின் அடிப்படையில் சுதந்திரமானதும் நேர்மையாதுமான 2020 பொதுத்தேர்தலை நடாத்த தேர்தல் திணைக்களம் கொவிட் 1 9 கொரோனா வைரஸ் தடுப்பு சுகாதார வழிமுறைகளுக்கமைய நடாத்த மாவட்ட மட்டத்தில் பூர்வாங்க ஏற்பாடுகள் துரிதமாக இடம்பெற்று வருகின்றன .

இந்த ஏற்பாடுகளுக்கமைய மட்டக்களப்பு மாவட்ட மட்டத்தில் நேர்த்தியான தேர்தலை நடாத்த அனைத்து ஏற்பாடுகளும் திருப்திகரமாக இடம்பெற்று வருவதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் அரசாங்க அதிபருமான திருமதி. கலாமதி பத்மராஜாதெரிவித்தார்.

இந்த ஏற்பாட்டின் கீழ் இம்மாவட்டத்தில் தேர்தல் கடமையிலீடுபடவுள்ள அரச சேவை பணியாளர்களுக்கு இத்தேர்தலில் பின்பற்றவுள்ள புதிய சுகாதார பணிப்பாளர் நாயகத்தின் அறிவுறுத்தலுக்கமைவான வழிமுறைகள், புதிய சட்ட ஏற்பாடுகள் மற்றும் நேர்த்தியான தேர்தலை நடாத்த பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் பற்றிய அறிவூட்டல்கள் விளக்கமுறையுடன் மாவட்ட தேர்தல் அலுவலகத்தால் நடாத்தப்பட்டு வருகின்றன.

இதன்கீழ் தேர்தல் வாக்கெண்ணும் பணிகளில் ஈடுபடவுள்ள 206 வாக்கெண்ணுதல் மற்றும் வளங்கள் பாரமெடுக்கும் உத்தியோகத்தர்களுக்கு விசேட அறிவூட்டல் பயிற்சி வழங்கும் செயலமர்வு நேற்று (30) மாலை மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் அரசாங்க அதிபருமான திருமதி. கலாமதி பத்மராஜா தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இதன்போது மட்டக்களப்பு மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர் ஆர்.சசீலன், பயிற்சி உதவித் தேர்தல்கள் ஆணையாளர் ரீ.ஹென்ஸ்மன் ஆகியோரால் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் இத்தேர்தலுக்கான புதிய சட்டவிதிமுறைகள் பற்றிய செயல் முறையிலான தெளிவான அறிவூட்டல் வழங்கப்பட்டது.