கிழக்கில் 3மாவட்டங்களையும் 3வேறு கட்சிகள் கைப்பற்றின

(சகா)
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பலரது கவனத்தையும் ஈர்த்த கிழக்கு மாகாணத்தில் மூன்று மாவட்டங்களையும் மூன்று வெவ்வேறு கட்சிகள் கைப்பற்றின.

கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தை ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி கைப்பற்றியுள்ளதோடு மட்டக்களப்பு மாவட்டத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றி கொண்டுள்ளதோடு திருமலை மாவட்டத்தை ஐக்கிய மக்கள் சக்தி கட்சியும் கைப்பற்றியுள்ளன.

திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 126012 வாக்குகளைப் பெற்று 03 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சக்தி கட்சி 102274 வாக்குகளைப் பெற்று 02 ஆசனங்களையும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 43319 வாக்குகளைப் பெற்று 01 ஆசனத்தையும் தேசிய காங்கிரஸ் 38911 வாக்குகளைப் பெற்று 01 ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளது.

இம்முறை அம்பாறை மாவட்டத்தில் இலங்கை தமிழ் அரசு கட்சி (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு) எவ்வித ஆசனங்களையும் பெறவில்லை.

திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் அம்பாறை சம்மாந்துறை பொத்துவில் கல்முனை ஆகிய தேர்தல் தொகுதிகளில் 05 இலட்சத்தி 13 ஆயிரத்தி 979 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த நிலையில் 402,344 பேர் வாக்களித்திருந்தனர். இதில் 385997 வாக்குகள் செல்லுபடியான வாக்குகளாக பதிவானதோடு 16347 வாக்குகள் நிராகரிக்கப்பட்டிருந்தன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு 79460 வாக்குகளைப் பெற்று 02 ஆசனங்களையும் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி 67692 வாக்குகளைப் பெற்று 01 ஆசனத்தையும் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 34428 வாக்குகளைப் பெற்று 01 ஆசனத்தையும் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 33424 வாக்குகளைப் பெற்று 01 ஆசனத்தையும் பெற்றுக் கொண்டதோடு ஐக்கிய மக்கள் சக்தி 28362 வாக்குகளை பெற்ற போதிலும் எவ்வித ஆசனங்களையும் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

திருகோணமலை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சி 86394 வாக்குகளைப் பெற்று 02 ஆசனத்தையும் ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 68,681 வாக்குகளைப் பெற்று 01 ஆசனத்தையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு 39570 வாக்குகளைப் பெற்று 01 ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளது.