7 வயது சிறுவன் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொலை!

மாத்தளை, கலவெல, பாத்கலோகொல்ல பகுதியில், 7 வயது சிறுவன் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த சிறுவன் சில நாட்களுக்கு முன் காணாமல் போயிருந்த நிலையில் நேற்று (சனிக்கிழமை) அவரின் வீட்டிற்கு அண்மையிலுள்ள கால்வாய் அருகே சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். உறவினர்களுடன் வசித்து வரும் குறித்த சிறுவன், போதைப்பொருளுக்கு அடிமையான ஒருவரினால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.


அத்துடன், சிறுவனின் சடலத்தில், துணியைப் பயன்படுத்தி கழுத்து நெரிக்கப்பட்ட தடையங்கள் காணப்படுவதாகவும் சம்பவ இடத்தில் ஹெரோயின் போதைப் பொருள் பயன்படுத்தியமைக்கான ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், சிறுவனின் சடலம் பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணையை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.