நான்கரை ஆண்டுகள் விளக்க மறியலில் வைக்கப்பட்ட பிள்ளையான் இன்று விடுதலை!



(ரீ.எல்.ஜவ்பர்கான்)
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலைச் சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு சுமார் நான்கரை ஆண்டுகள் விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்து கடந்த 24.11.2020 அன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்த மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான பிள்ளையான் எனப்படும் சிவனேசத்துரை சந்தரகாந்தன் இன்று (13)விடுதலை செய்யப்பட்டார்.
இவர்மீதான வழக்கு மேல் நீதிமன்ற நீதிபதி எஸ்.சூசைசதாசனினால் தள்ளுபடி செய்யப்பட்டது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வழக்கு கடந்த திங்கட்கழமை மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் மேல் நீதிமன்ற நீதிபதி டி.சூசைதாசன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டபோது சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான அரச தரப்பு சிரேஷ்ட சட்டத்தரணி இந்த வழக்கில் தொடர்ந்து சாட்சிகளை முற்படுத்தி நெறிப்படுத்த தேவையில்லை எனவும் இவ் வழக்கை தொடர்ந்தும் முன்னெடுக்க சட்டமா அதிபர் திணைக்களம் எதிர்பார்க்க வில்லையெனவும் நீதிமன்றில் தெரிவித்ததையடுத்து இதனை பரிசீலனை செய்த நீதிமன்றம்இன்று புதன்கிழமையன்று இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பை அறிவிப்பதாக நீதிபதி தெரிவித்துள்ளார் என சட்டத்தரணிகள் தெரிவித்திருந்தனர்.இதற்கமைய பிள்ளையான் இன்று புதன்கிழமை விடுதலை செய்யப்பட்டார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் 2005ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் திகதி நள்ளிரவு ஆராதனையின்போது மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இச்சம்பவத்தில் சந்தேகத்தின்போரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்படடிருந்த முன்னாhள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எட்வின் கிருஸ்ணாணந்தராஜா என்ற பிரதீப் மாஸ்டர் அடங்கலாக மேலும் நாலுபேரும் இன்று விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.