மண்முனை வடக்கு பிரதேசத்திற்கான முதலாவது ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்


(எஸ்.எஸ்.அமிர்தகழியான்)
மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேசத்தின் இவ்வாண்டுக்கான முதலாவது பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம், பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் இன்று (04) மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

இதன்போது கடந்த ஆண்டு இப்பிரதேச செயலகப்பிரிவில் மெற்கொள்ளப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாகவும் இவ்வாண்டு நடைமுறைப்படுத்துவதற்காக அனுமதி கிடைக்கப்பெற்ற அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டன.

மேலும் இப்பிரதேசத்தின் பொருளாதாரம், கல்வி, சுகாதாரம், சமுர்த்தி, சுற்றாடல் உட்பட அனைத்து திணைக்களங்கள் சார் விடயங்களும் ஆராயப்பட்டதுடன் அவற்றில் காணப்படும் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இங்கு ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் சிவனேசதுரை சந்திரகாந்தன் கருத்து வெளியிடுகையில் மட்டக்களப்பு நகர் பிரதேசத்தில் டெங்கு நோயினைக் கட்டுப்படுத்த வடிகான்கள் முறையாக சீர் செய்யப்படவேண்டும், நகர்ப்புறம் மாத்திரமன்றி கிராமப் புறங்களிலும் சேகரிக்கப்படும் தின்மக்கழிவுகள் முறையாக அகற்ற திட்டமிடவேண்டும். மேலும் திட்டமிட்டு அழகிய மாநகரத்தினையும், மக்களுக்கான சரியான சேவைகளையும், வருகின்ற திட்டங்களை முறையாக அமுலாக்கிக் கொடுப்பதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள், சிறுவர் துஸ்பிரயோகங்கள், போதைவஸ்த்துப் பாவனை தொடர்பாக களஉத்தியோகத்தர்கள், அரச அதிகாரிகள் கூடிய கவனஞ்செலுத்த வேண்டும். இவற்றைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

மண்முனைவடக்கு பிரதேச செயலாளர் வீ. வாசுதேவன் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம், இரா சாணக்கியன்உட்பட உதவிப் பிரதேச செயலாளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர், கணக்காளர், சமுரத்தி தலைமைமை முகாமையளர், மாவட்டத்தின் கசல திணைக்களங்களின் தலைவர்களும் அதிகாரிகளும் பிரசன்னமாயிருந்தனர்.