யாழ். மாநகர சபை எல்லைக்குள் அதிரடி சட்டங்கள்! எச்சில் துப்பினால் ரூ.10,000 வரை தண்டம்!



“யாழ். மாநகர சபை எல்லைக்குள் எச்சில் துப்பினால் 2ஆயிரம் ரூபாயும் , வீதிகளில் கழிவுகளை வீசினால் 5ஆயிரம் ரூபாயும் தண்டமாக அறவிடப்படும்” என யாழ்.மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் அறிவித்துள்ளார். 

யாழ்.மாநகர சபையில் இன்றைய தினம் புதன்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார். 

“யாழ் மாநகர சபைக்கு உட்பட்ட பிரதேசங்களில் சுகாதார நடைமுறைகள், வீதிப் போக்குவரத்து நடைமுறைகளைக் கண்காணிப்பதற்கு மாநகர காவல் படை எனும் பெயரில் 05 உத்தியோகத்தர்களைக் கொண்ட குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது” என்றும் அவர் தெரிவித்தார்.

இவர்கள், யாழ் மாநகரின் தூய்மையை பாதுகாக்கும் வகையில் வீதிகளில் குப்பை போடுபவர்கள், வீதிகள், பொது இடங்களில் வெற்றிலை உமிழ்ந்து விட்டு எச்சில் துப்புபவர்கள், தூய்மையை சரிவரப் கடைப்பிடிக்காதவர்கள் என அடையாளம் காணப்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கென நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதுமட்டுமன்றி வீதிப் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தும் வகையில் அனுமதிக்கப்படாத இடங்களில் வாகனங்களை நிறுத்தும் சாரதிகள் மீதும் நடவடிக்கை எடுப்பார்கள். இதற்கு பொதுமக்கள் போதுமான ஒத்துழைப்பினை வழங்கவேண்டும்.

மேலும், சுகாதார நடைமுறைகளை மீறுபவர்கள் மீது தண்டப்பணம் அறவிடும் நடைமுறையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில் வீதி மற்றும் பொது இடங்களில் வெற்றிலை துப்பினால் 2,000ரூபாவும், மீண்டும் தவறிழைத்தால் 4,000 ரூபா வரையும் தண்டம் அறவிடப்படும். மேலும் வீதிகள் பொது இடங்களில் குப்பை போடுபவர்களுக்கு 5,000ரூபாவும் மீண்டும்  செய்தால் 10,000ரூபா தண்டமும், அத்துடன் பொது இடங்களில் மலசலங்களைக் கழிப்பவர்களுக்கு 5,000ரூபாவும் மீண்டும்  செய்தால் 10,000 ரூபாவும் தண்டமாக அறவிடப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

இந்த நடைமுறை நாளை வியாழக்கிழமை  முதல் செயற்படுத்தப்படும் எனவும் அதற்கு பொதுமக்கள், வர்த்தகர்கள் ஏற்றவகையில் ஒத்துழைப்பு  வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.

வெற்றிலை துப்பினால் 2,000ரூபாய்

மீண்டும் தவறிழைத்தால் 4,000 ரூபாய்

பொது இடங்களில் குப்பை போட்டால் 5,000ரூபாய்

மீண்டும் செய்தால் 10,000ரூபாய்

மலசலங்களைக் கழிப்பவர்களுக்கு 5,000ரூபாய்

மீண்டும் செய்தால் 10,000 ரூபாய்