அனுமதியில்லாமல் இலங்கைக்கு வந்த சீன கப்பலில் அணு சக்திக்கு பயன்படுத்தப்படும் இரசாயனப் பொருள்!



இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்துள்ள சீனக் கப்பலில் அணு சக்திக்கு பயன்படுத்தப்படும் யுரேனியம் எனப்படும் இரசாயன பொருள் உள்ளதாக இலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் பேரவையின் பணிப்பாளர் நாயகம் எச். எல். அனில் ரஞ்சித் தெரிவித்தார்.

இவ்வாறான இரசாயன பொருட்களை நாட்டிற்கு கொண்டு வரும் போது, விசேட அனுமதி பெறப்படல் வேண்டும் எனவும் இலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் பேரவையின் பணிப்பாளர் நாயகம் எச். எல். அனில் ரஞ்சித் தெரிவித்தார்.

இருப்பினும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வருகை தந்துள்ள கப்பலுக்கு எவ்வித அனுமதியும் பெற்றுக்கொள்ளப்படவில்லை எனவும் இதனால் துறைமுகத்திலிருந்து கப்பலை வெளியேற்றுமாறு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, குறித்த கப்பல் தற்போது துறைமுகத்திற்கு வெளியில் நங்கூரமிடப்பட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் இந்திக்க டி சில்வா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.