இஸ்லாமிய அடிப்படைவாதத்தை முற்றாக இல்லாதொழிக்க மக்களிடம் ஒத்துழைப்புக் கோரும் சரத் வீரசேகர!


இஸ்லாமிய அடிப்படைவாத செயற்பாடுகளை இல்லாதொழிக்க நாட்டு மக்கள் பாதுகாப்பு தரப்பினருக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அடிப்படைவாத கொள்கை எவ்வழியில் தோற்றம் பெற்றாலும் அதற்கு இடமளிக்க முடியாது என பொதுமக்கள் பாதுகாப்பு அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஐ.எஸ்.ஐ.எஸ்.அடிப்படைவாதம், வாஹப் வாதம், சல்பி வாதம் என மதம் மற்றும் கொள்கையை அடிப்படையாகக் கொண்ட அடிப்படைவாதம் காணப்படுகிறது.

உருவ வழிபாட்டுக்கு இவர்கள் முழுமையாக எதிர்ப்பை வெளிப்படுத்துகிறார்கள். தங்களின் மத கொள்கையினை பரப்புவதற்கு பிற மதங்களை கொல்வது சரி என்ற நிலைப்பாட்டில் உள்ளார்கள்.

அடிப்படைவாதத்தை இல்லாதொழிக்க அரசாங்கம் சிறந்த நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது. இதற்கு பொது மக்களின் ஒத்துழைப்பு அத்தியாவசியமானது. பாதுகாப்பு தரப்பினராலும், புலனாய்வுபிரிவினராலும் மாத்திரம் அடிப்படைவாதத்தை இல்லாதொழித்து தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாது.

அடிப்படைவாதம் தொடர்பில் நாட்டு மக்கள் பாதுகாப்பு தரப்பினருக்கு உரிய தகவல்களை வழங்க வேண்டும்.

தீவிர மத கொள்கையினை உடையவர்கள் ஒரு கட்டத்தில் அடிப்படைவாதிகளாக மாற்றமடைகிறார்கள். இறுதியில் பயங்கரவாதிகளாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் இவ்வாறான பின்னணியில் நடத்தப்பட்டது.

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடையவர்களை சட்டத்தின் முன்னிலைப்படுத்த அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. அடிப்படைவாத தாக்குதல்கள் நாட்டில் எதிர்காலத்தில் இடம்பெறாத அளவிற்கு கடினமான பல தீர்மானங்களை எடுக்க நேரிட்டுள்ளது.

ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் தொடர்பிலான விசாரணை அறிக்கை குறித்து எதிர்தரப்பினர் மாறுப்பட்ட பல கருத்துக்களை தெரிவித்துள்ளார்கள்.

குண்டுத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் அறிந்திருந்தால் அதனை பாதுகாப்பு தரப்பினருக்கு அறிவிக்குமாறு குறிப்பிட்டோம்.

ஆனால் எதிர்த்தரப்பினர் இதுவரையில் எவ்வித முறைப்பாடுகளையும் முன்வைக்கவில்லை. ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையினையும் அரசியல் தேவைக்காக எதிர்க்கட்சியினர் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்றார்.