மனைவியை அவதூறாக பேசியவரை தட்டி கேட்க சென்ற கணவன் மீது கத்திகுத்து தாக்குதல் – கல்லடியில் சம்பவம்

 


மட்டக்களப்பு- கல்லடியில் இன்று பிற்பகல் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கல்லடி  திருச்செந்தூர் 8ஆம் வட்டார பகுதியில் பெண் ஒருவருக்கும் ஆண் ஒருவருக்குமிடையில் வாய்த்தர்க்கம் எழுந்துள்ள நிலையில் பெண்ணினை அவதூறாக பேசியதை அவதானித்த அங்கு நின்றிருந்த பெண்ணின் கணவன் அதனை தடுக்க முனைந்த நிலையில்  அதே வீதியைச் சேர்ந்த 32 வயதுடைய செரன் அவுஸ்கோன்(சுரேன்) எனும் நபர் கையில் இருந்த கத்தியால் மூன்று தடவைகள் வெட்டிவிட்டு தலைமறைவாகியுள்ளார்.

குறித்த சம்பவத்தில் கத்தி குத்துக்கு இலக்காகிய 43 வயதுடைய ரகுபதி உதயகுமார் என்பவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கத்தி குத்தினை நடத்திவிட்டு தப்பி சென்ற நபரை   காத்தான்குடி பிரதேச பொலிஸார் வலைவீசி தேடுகின்றனர் 

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்