விபத்தில் ஆசிரியை பலி - கணவர் மற்றும் பிள்ளை வைத்தியசாலையில்


திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியின் சேருநுவர பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் அவரது கணவர் மற்றும் பிள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்து சம்பவம் நேற்றைய தினம் (25) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதில் திருகோணமலையைச் சேர்ந்த பாமதி ஞானவேல் என்ற ஆசிரியையே பலியாகியுள்ளதுடன், அவரது கணவர் மூதூர் வைத்தியசாலையிலும், 7 வயதான பிள்ளை திருகோணமலை வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வெருகல் முருகன் ஆலயத்திற்கு முச்சக்கரவண்டியில் சென்று திரும்பி வருகின்றபோது காரொன்று கட்டுப்பாட்டை இழந்து முச்சக்கரவண்டியின் மீது மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சேருவில பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.