மட்டக்குளி காக்கைதீவில் கரையொதுங்கிய சடலத்தால் பரபரப்பு! 6 இராணுவத்தினர் உட்பட எழுவர் கைது



மட்டக்குளி – காக்கை தீவு கடற் கரையில், முகம் துணியொன்றினால் சுற்றி, கை, கால்கள் கயிற்றினால் கட்டப்பட்ட நிலையிலும் கரையொதுங்கிய சடலம் தொடர்பில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் இது தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விஷேட விசாரணைகளில், இராணுவ புலனாய்வுப் பிரிவின் கோப்ரல் உள்ளிட்ட 6 இராணுவத்தினரும் மட்டக்குளி பிரதேசத்தின் கிராம சேவகரான பெண்ணொருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்..

கொழும்பு வடக்கு குற்ற விசாரணைப் பிரிவினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட நபர், தற்போது கைது செய்யப்பட்டுள்ள கிராமசேவகரின் கணவர் எனவும், அவர் 40 வயதுடைய எல்லை வீரர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மட்டக்குளி இராணுவ முகாமில் கடமையாற்றிய, புலனாய்வுப் பிரிவின் கோப்ரல் உள்ளிட்ட 6 பேரை இராணுவ பொலிஸ் பிரிவு கைது செய்து மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸாரிடம் ஒப்படைந்திருந்து. இந்நிலையில் பொலிஸார் பெண் கிராம சேவகரைக் கைது செய்திருந்தனர்.

நேற்று குறித்த பெண் கிராம சேவகரையும், இராணுவ புலனாய்வு கோப்ரலையும் மட்டும் கொழும்பு பிரதன நீதிவான் புத்திக ஸ்ரீ ராகல முன்னிலையில் ஆஜர் செய்த பொலிஸார், அவர்களை 7 நாள் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி பெற்றுக்கொண்டுள்ளனர்.

ஏனைய 5 இராணுவத்தினரும் நேற்று மலை வரை மன்றில் ஆஜர் செய்யப்படாத போதும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர்களை இன்று (14.09.2021) மன்றில் ஆஜர் செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் பொலிஸார் கூறினர்.