மட்டக்களப்பு பறங்கியாமடு பிரதேச மக்களினால் கவனயீர்ப்பு போராட்டம்


(ரூத் ருத்ரா)

மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பறங்கியாமடு புகையிரத பாதையில் பாதுகாப்பு கடவை அமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் தமது வழமையான வீதி போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமையை கண்டித்தும் போக்குவரத்திற்கு விடுமாறு கோரி பிரதேச மக்களினால் இன்று (ஞாயிறு 17) கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இன்று காலை குறித்த பிரதேச புகையிரத கடவை பாதையில் ஒன்று கூடியவர்கள் கையில் சுலோகங்களை ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பியவாறும் தமது எதிர்ப்பினை தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

'புகையிரத கடவையை அடைத்து வைத்து மக்களின் வயிற்றில் அடிக்காதே.' 'புகையிரத திணைக்கள அதிகாரிகளே, எமது மீன்பிடி வீதியனை அடைத்து வைக்காமல் திறந்து விடவும்' ' எமது வழமையான பாதையினை திறந்து விடவும்' என்பன போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை கையில் ஏந்தியிருந்தனர்.

பறங்கியாமடு மீனவர் கிராம மக்கள் தமது போக்குவரத்தினை வழமையான கடற்கரை வீதியினால் புகையிரத பாதையின் குறுக்காக கடந்து மேற்கொண்டு வந்திருந்தனர்.

கிரான்,சந்திவெளி,முறக்கொட்டான்சேனை,மற்றும் அயல் கிராமங்களைச் சேர்ந்தோர்கள், வியாயபாரிகள் என பலரும் தமது கடற்றொழில் சார்ந்த நடவடிக்கையில் ஈடுபட இவ் வீதியினையே பயன்படுத்தினர்.

இவ் பாதையானது கடற்கரைக்கு செல்வதற்கு குறுகிய தூரமாக காணப்பட்டதனால் போக்குவரத்திற்கு இலகுவாக காணப்பட்டது.தற்போது 5 கிலோமீற்றர் தூரம் சுற்றி செல்லவேண்டிய நிலை தமக்கு ஏற்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.

இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன்,பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் போன்றோர்களிடம் குறித்த விடயம் தொடர்பாக தெரிவித்தபோதிலும் அவர்கள் நேரில் வந்து பார்வையிட்டு தீர்வு பெற்று தருவதாக கூறிச் சென்றனர் இதுவரை எதுவித பதிலும் கிடைக்கவில்லை என்கின்றனர்.எனவே புகையிரத வீதியினை போக்குவரத்திற்கு ஏற்றால் போல் மாற்றி அமைத்து தருமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பறங்கியாமடு கிராம மக்கள் கேட்கின்றனர்.