லிட்ரோ கேஸ் நிறுவனம் பொது மக்களிடம் விடுத்துள்ள அவசர கோரிக்கை



சமையல் எரிவாயு சிலிண்டர்களில் சோப் நுரை மற்றும் பிற பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்குமாறு லிட்ரோ கேஸ் லங்கா லிமிடெட் பொது மக்களிடம் அவசர கோரிக்கையை முன்வைத்துள்ளது.

எரிவாயு சிலிண்டரை தனிப்பட்ட முறையில் பரிசோதிப்பது ஆபத்தான நிலை என நிறுவனத்தின் விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் பணிப்பாளரான ஜானக பத்திரத்ன தெரிவித்தார்.

கடையில் இருந்து வீட்டிற்கு எரிவாயு சிலிண்டரை கொண்டு வரும்போது சீல் வைக்கப்பட்டு இருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

சீல் அகற்றப்பட்டால், ஒரு ரெகுலேட்டர் அல்லது பாதுகாப்பு மூடி இணைக்கப்பட வேண்டும்.

வால்வை திறந்து சிலிண்டரை சோதனை செய்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.

பாதுகாப்பு மூடியை சரிசெய்து சிலிண்டரை வெளியில் வைத்த பின்னர் எரிவாயு சிலிண்டர் தொடர்பில் ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின் 1311 என்ற தொலைபேசி இலக்கத்தினை தொடர்புக்கொள்ளுமாறும் பொது மக்களிடம் அவர் கேட்டுக்கொண்டார்.

தரமற்ற கட்டுப்பாட்டாளர்கள் மற்றும் இணைக்கும் குழாய்களால் நாட்டில் அண்மைய நாட்களில் பல எரிவாயு கசிவு வெடிப்புகள் பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கசிவு அல்லது வேறு ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால், பொதுமக்கள் சிலிண்டரை வளாகத்திற்கு வெளியே வைத்திருக்க வேண்டும் அத்துடன் 1311 ஹொட்லைன் மூலம் அதிகாரிகளை தொடர்பு கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.