மட்டக்களப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நிவைவேந்தல்!


தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நிவைவேந்தல் நிகழ்வு இன்று (புதன்கிழமை) மட்டக்களப்பு கல்லடி சித்திவிநாயகர் ஆலய முன்றிலில் நடைபெற்றது.

இலங்கை தமிழரசுக்கட்சியின் உபதலைவரும் முன்னாள் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினருமான பொன்.செல்வராசா தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இதன்போது உயிர்நீர்த்தவர்களின் நினைவாக ஈகச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டதுடன் கூட்டுப்பிரார்த்தனைகளும் முன்னெடுக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவையின் தலைவர் சீ.யோகேஸ்வரன் மற்றும் கிழக்கு மாகாண அமெரிக்க மிசனின் குரு முதல்வர் அருட்தந்தை லூத் ஆகியோரினால் இந்த கூட்டுப்பிரார்த்தனைகள் முன்னெடுக்கப்பட்டதுடன் நினைவுரைகளும் நிகழ்த்தப்பட்டன.

இதன்போது முள்ளிவாய்க்கால் இனஅழிப்பின் வேதனைகளை வெளிப்படுத்தும் வகையிலான முள்ளிவாய்க்கால் கஞ்சியும் பகிரப்பட்டன.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன்,பிரதி முதல்வர் க.சத்தியசீலன்,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன்,பா.அரியநேத்திரன்,முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர் கி.துரைராஜசிங்கம்,முன்னாள் கிழக்கு மாகாண உதவி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் உட்பட மாநகரசபை உறுப்பினர்கள்,முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள்,தவிசாளர்கள்,உறுப்பினர்கள்,வாலிப முன்னணி உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.