அரச ஊழியர்களை கடமைக்கு அழைப்பதை மட்டுப்படுத்துவதற்கு தீர்மானம்!


அரச ஊழியர்களை கடமைக்கு அழைப்பதை மட்டுப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் எரிபொருள் உள்ளிட்ட வளங்களின் பற்றாக்குறை காரணமாக அரசாங்க செலவினங்களைக் கட்டுப்படுத்தும் வகையிலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் கே.டி.எஸ்.ருவன்சந்திர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில், பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

அலுவலகப் பணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அத்தியாவசிய ஊழியர்களை மாத்திரம் வரவழைத்து நிறுவனத் தலைவரின் விருப்பத்திற்கேற்ப செயற்பட அனுமதிக்குமாறு அமைச்சின் செயலாளரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், தொலைதூரத்தில் இருந்து பணிக்கு வரும் அதிகாரிகளை அவர்கள் வசிக்கும் இடத்திற்கு அருகில் உள்ள பணியிடத்திற்கு தற்காலிகமாக இணைக்க தேவையான அதிகாரங்கள் நிறுவனங்களின் தலைவர்களுக்கு வழங்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மின்சாரம், எரிபொருள், தண்ணீர் போன்றவற்றைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்துவதே இதன் நோக்கமாகும் எனவும் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் கே.டி.எஸ்.ருவன்சந்திர தெரிவித்துள்ளார்.