போராட்டத்தை முன்னின்று நடத்திய அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் பிணையில் விடுவிப்பு!


கொழும்பு – காலி முகத்திடல் போராட்டத்தை முன்னின்று நடத்திய அருட்தந்தை ஜீவந்த பீரிஸ், நீதிமன்றத்தில் முன்னிலையாகி பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

அவர் தலா 05 இலட்சம் ரூபாய் பெறுமதியான 02 சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

அத்துடன், அவர் வெளிநாடு செல்லவும் தடை விதிக்கப்பட்டது.

கடந்த ஜூலை மாதம் 9ஆம் திகதி கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்குள் அவர் சட்டவிரோதமாக நுழைந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த நிலையில், நாளை காலை கொம்பனிவீதி பொலிஸ் நிலையத்துக்கு வந்து அங்குள்ள பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவில் வாக்குமூலம் வழங்குமாறும் அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.