25 இழுவை படகுகளுடன் 189 இந்திய மீனவர்கள் கைது !


இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் இந்த வருடத்தில் இதுவரை 189 இந்திய மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதுடன் 25 இழுவை படகுகளையும் கைப்பற்றபட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் சட்ட நடவடிக்கைகளுக்காக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

இலங்கை கடற்பரப்பில் வெளிநாட்டு மீனவர்கள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுவதால் உள்நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் மற்றும் நாட்டின் கடல் வளம் போன்றவற்றின் விளைவுகளை கருத்தில் கொண்டு, நடவடிக்கை எடுப்பதாக கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நேற்று இரவு இலங்கை கடற்படையினர் விசேட அதிரடி நடவடிக்கையின் போது காங்கேசன்துறை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 8 இந்திய மீனவர்களை நேற்றிரவு கைது செய்துள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

கைப்பற்றப்பட்ட இழுவை படகு மற்றும் எட்டு இந்திய மீனவர்கள் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டதுடன், மேலதிக நடவடிக்கைகளுக்காக மயிலடி கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.