சுகாதார அணையாடைகளை உள்நாட்டிலேயே தயாரிக்க நடவடிக்கை -கெஹலிய ரம்புக்வெல்ல



இலங்கையில் சுகாதார அணையாடைகளை தயாரிக்கும் திட்டத்தை ஆரம்பிப்பது தொடர்பில் ‘PAD-MAN’ என அழைக்கப்படும் இந்திய தொழில்முனைவோர் அருணாசலம் முருகநாதனுடன் கலந்துரையாடல் தொடர்கிறது என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

பிரேமநாத் டோலவத்த, ரோகினி கவிரத்ன, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இன்று சபையில் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த அமைச்சர் ரம்புக்வெல்ல, இலங்கையில் சமீபகாலமாக எழுந்துள்ள எரியும் பிரச்சினைக்கு தீர்வாக இந்தத் திட்டம் காணப்படுவதாகத் தெரிவித்தார்.

“இலங்கையில் சுகாதார அணையாடைகளை தயாரிக்கும் திட்டத்தை தொடங்குவதற்கு நாங்கள் ‘PAD-MAN’ உடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இது இலங்கையிலுள்ள இளம் பெண்கள் மற்றும் சிறுமிகள் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சினை என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன், இருப்பினும் இது எங்கள் கலாசார மற்றும் சமூக கட்டுப்பாடுகளின் விளைவாக இலங்கையில் அடிக்கடி பொதுமக்கள் மத்தியில் பரவலாக விவாதிக்கப்படவில்லை, ”என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அண்மையில் டெய்லி மிரர் வெளியிட்ட செய்தியை மேற்கோள்காட்டிய எம்.பி.தொலவத்த, பெண் குழந்தைகள் தாங்கள் எதிர்கொள்ளும் உடல்நலப் பிரச்சினைகளைச் சமாளிக்கத் தேவையான இந்த சுகாதார அணையாடைகளை கொள்வனவு செய்ய முடியாததால் அவர்கள் பாடசாலைக்குச் செல்வதைத் தவிர்ப்பது கவலையளிக்கிறது. “இது நான் சமீபத்தில் டெய்லி மிரரில் படித்த ஒரு எரியும் பிரச்சினை” என சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.

சுகாதார அணையாடைகளுக்கு 42% வரி விதிக்கப்படுவதாகவும், அதிக வரிகள் விலைவாசி உயர்வைத் தூண்டின என பாராளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன தெரிவித்தார்.

2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தின் போது இந்த விடயத்தை எடுத்துக் கூறிய எதிர்க்கட்சித் தலைவர், “அந்த காலத்தில் நான் கேலி செய்யப்பட்டேன், குறிப்பிட்ட பெயரால் அழைக்கப்பட்டேன், ஆனால் அது இன்று தீவிரமான பிரச்சினையாக மாறியுள்ளது. குறைந்தபட்சம் சுகாதார அணையாடைகளுக்கு விதிக்கப்படும் வரியைக் குறைக்க அரசாங்கம் ஏதாவது ஒரு தீர்வைக் கொண்டு வர வேண்டும் என்றார்.