ஹோட்டலில் போதைப்பொருள் பாவனையாளர்களுக்கு விசேட அறை : 8 பேர் கைது !


ஹோட்டல் ஒன்றுக்குள் போதைவஸ்து பாவனையாளர்களுக்கு விசேடமாக அமைக்கப்பட்ட அறைகளுக்குள் பல்வேறுபட்ட நச்சுத்தன்மை வாய்ந்த போதை வஸ்துக்களுடன் எட்டு இளைஞர்களை கம்பளை பொலிஸார் இன்று (15) காலை கைது செய்துள்ளனர்.

யாருக்கும் சந்தேகம் எழா வகையில் கம்பளை கண்டி வீதியில் இயங்கிவந்த மேற்படி ஹோட்டலுக்கு பாடசாலை மாணவர்கள் இளைஞர்களும் அடிக்கடி வந்து போவதனை நீண்ட நாட்களாக அவதானித்துவந்த கம்பளை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் இன்று செவ்வாய்க்கிழமை (15) காலை மோப்ப நாயின் உதவியுடன் மேற்படி சுற்றிவளைப்பினை மேற்கொண்டனர்.

கைதுசெய்யப்பட்ட ஏழு இளைஞர்களிடமும் ஹெரோயின் 'ஐஸ்' கஞ்சா' உட்பட போதை மாத்திரைகளும் இருந்துள்ளதுடன் மேற்படி ஹோட்டலினை நடாத்திச் சென்ற 31 வயது பிரதான சந்தேக நபரிடம் போதைவஸ்துக்கள் விற்பனையின் மூலம் பெறப்பட்டதக நம்பப்படும் ஒரு இலட்சத்து ஆறாயிரம் ரூபாவினையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இதன் போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை கம்பளை மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றனர்.