தந்தையை கொலை செய்த மனநிலை பாதிக்கப்பட்ட மகன் கைது !


வீட்டின் மண்டபத்தில் படுத்திருந்த முதியவரான தந்தையை தடியினால் தாக்கி கொலை செய்த மனநிலை பாதிக்கப்பட்ட மகன் ஒருவரை கைது செய்துள்ளதாக குளியாபிட்டி பொலிஸார் தெரிவித்தனர். நேற்று இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து உடன் செயற்பட்ட குளியாபிட்டி பொலிஸார் கிதலவ, பொல்கொல்லேவ பிரதேசத்திற்குச் சென்ற போது குறித்த தந்தை உயிரிழந்திருந்துள்ளார்.

63 வயதுடைய எம். பி. சரத் குமாரசிங்க என்பவரே இவ்வாறு மகனால் அடித்து கொலை செய்யப்பட்டவராவார். சம்பவ இடத்திற்குப் பொலிஸார் சென்று மேற்கொண்ட விசாரணைகளுக்கு அமைய வீட்டிலிருந்த சந்தேக நபரான மகன் கைது செய்யப்பட்டதோடு, தந்தையைத் தாக்கியதாகச் சந்தேகிக்கப்படும் தடியினையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் சில காலமாக மனநிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர் என்பதோடு, தற்போது அவர் சிகிச்சையினை நிறுத்தியுள்ளமை விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை குளியாபிட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டிருந்த குளியாபிட்டி பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.